கீவ் நகரிலிருந்து தப்ப முயன்ற இந்திய மாணவர் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு.. மருத்துவமனையில் அனுமதி
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து தப்பிக்க முயன்ற இந்திய மாணவர் மீது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை மத்திய அமைச்சர் விகே சிங் உறுதி செய்துள்ளார்.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. 9வது நாளாக உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படை தாக்குதல் நடத்துகிறது. அங்குள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
‛ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் தனியார், இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றன.

மத்திய அமைச்சர்கள் குழு
இந்திய மாணவர்கள் மீட்புக்கான ஒருங்கிணைப்பு பணியை மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி, ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கிரன் ரிஜிஜூ, விகே சிங் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியாவின் புக்காரெஸ்ட், ஹங்கேரியின் புத்தாபெஸ்ட், போலந்தின் ரிசோ, சுலோவாகியாவின் கோசிஸ் நகரங்களில் இருந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி ஹங்கேரியிலும், ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியாவிலும், கிரண் ரிஜிஜூ சுலோவாகியாவிலும், வி.கே.சிங் போலந்திலும் ஒருங்கிணைப்பு பணியை செய்து வருகின்றனர்.

இந்திய மாணவர் காயம்
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், உக்ரைன் லிவிங் நகரில் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் இந்திய மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் கீவ் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் இந்திய மாணவர் ஒருவர் மீது துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் விகே சிங் போலந்து நாட்டின் ரிசோ விமானநிலையத்தில் கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‛‛கீவ் நகரில் இருந்து புறப்பட்ட இந்திய மாணவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. இதனால் மீண்டும் கீவ் நகருக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கீவ் நகரில் இருந்து மாணவர்கள் அனைவரையும் வெளியேற்ற இந்திய தூதரகம் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. போரின்போது குறிப்பிட்ட நபரின் மதம், இனத்தை துப்பாக்கி குண்டுகள் பார்க்காது'' என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஒருவர் பலி
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு மளிகை கடையில் நின்ற கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகாவை சேர்ந்த நவீன் சேகரப்பா ஞானகவுடன் எனும் 4ம் ஆண்டு மருத்துவ மாணவர் ரஷ்ய படையின் குண்டுவீச்சில் பலியானது குறிப்பிடத்தக்கது.

130 பஸ்கள் ஏற்பாடு
உக்ரைனில் தொடர்ச்சியாக பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியர்களை பத்திரமாக மீட்க உதவும்படி ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினிடம், பிரதமர் நரேந்திர மோடி கேட்டு கொண்டார். அதனடிப்படையில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்தியர்களை மீட்க ரஷ்யா சார்பில் 130 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications