போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!
டெஹ்ரான்: அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போர் புரிந்து வருகின்றன. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 7 நாடுகளில் அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்கியது. இதன் பின்னணியில் ரஷ்யா கொடுத்த ஐடியா தான் உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போர் எதிர்பார்த்ததை விட மோசமாக சென்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட மத்திய கிழக்கு பிராந்திய போராக மாறி உள்ளது. இதற்கு ஈரானின் பதிலடி தாக்குதல் தான் காரணம்.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் சேர்ந்து கொடுக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வரும் ஈரான், அமெரிக்காவை பழிதீர்க்க மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து அடிக்கிறது.
ஈரான் கொடுக்கும் பதிலடி
மத்திய கிழக்கு நாடுகளாகவும், ஈரானின் அண்டை நாடுகளாகவும் சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஈராக் உள்பட பல நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ளன. இந்த இடங்களை குறிவைத்து ஈரான் அட்டாக் செய்து வருகிறது.
குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் கத்தாரில் அமைந்துள்ள மிகப்பெரிய அமெரிக்க ராணுவத் தளமான அல் உதித் விமானப்படைத் தளம், சவுதி அரேபியாவின் ரியாத், குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களையும் ஈரான் ட்ரோன்கள் மூலமாக தாக்கியது. இதுதவிர சவுதி அரேபியா மற்றும் கத்தாரில் உள்ள எண்ணெய் மற்றும் கியாஸ் கட்டமைப்புகளை குறிவைத்து ஈரான் தாக்கி உள்ளது.
பின்னணியில் ரஷ்யா
இவ்வளவு முக்கியமான அமெரிக்க ராணுவ கட்டமைப்புகளை ஈரான் எவ்வாறு துல்லியமாகத் தாக்கியது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே தான் மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 7 நாடுகளில் அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்கியதன் பின்னணியில் ரஷ்யா உள்ளதாக கூறப்படுகிறது. எந்தெந்த நாடுகளில் அமெரிக்காவின் விமான தளம், கடற்படை தளம், ராணுவ தளம் உள்ளது என்பது பற்றிய முக்கிய தகவல்களை ஈரானுக்கு, ரஷ்யா தான் வழங்கி உள்ளதாம்.
உளவு தகவல்கள் பரிமாற்றம்
அதேபோல் வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ''பஹ்ரைன், கத்தார், குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 7 இடங்களில் அமெரிக்காவின் பாதுகாப்பு துறை தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. அமெரிக்க ராணுவத்தின் கட்டளை மையம், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு முனையங்கள், ரேடார்கள் உள்ளிட்டவற்றை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் மீதான போர் தொடங்கியதில் இருந்தே அந்த நாடு ரஷ்யாவுடன் நெருக்கமாக செயல்பட தொடங்கியது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்கள், விமானங்கள் போன்ற ராணுவம், கடற்படை, விமானப்படைகளின் சொத்துகள் பற்றிய உளவு தகவல்களை ஈரானுக்கு, ரஷ்யா வழங்கியது. அதனை வைத்து தான் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் தற்போது வலுவிழந்துள்ள நிலையில் ரஷ்யா வழங்கும் தகவல்களை வைத்து செயல்பட்டு வருகிறது.
உதவி செய்யாத சீனா
ஈரானுக்கும், சீனாவுக்கும் நெருக்கமான உறவு உள்ளது. இருப்பினும் ஈரானுக்கு, சீனா எந்த ராணுவ உதவிகளையும் செய்யவில்லை. இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவுடன் ராணுவம் சார்ந்த உறவை ஈரான் வலுவாக வைத்துள்ளது.
ஆனால், ரஷ்யாவை போல் சீனாவுடன் ஈரான் அத்தகைய பாதுகாப்பு துறை சார்ந்த ஒத்துழைப்பை கொண்டிருக்கவில்லை. இதுதான் சீனா உதவி செய்யாததற்கு முக்கிய காரணமாகும்'' என கூறப்பட்டுள்ளது.
ஈரான் - ரஷ்யா உறவு
ரஷ்யா - ஈரானை எடுத்து கொண்டால் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. 2022ல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது போரை தொடங்கினார். இந்த சமயத்தில் ரஷ்யா - ஈரான் இடையேயான உறவு அதிகரித்தது. அதிநவீன ட்ரோன்களை உற்பத்தி செய்ய தேவையான தொழில்நுட்பங்களை ரஷ்யாவிற்கு, ஈரான் வழங்கியது. இதனை வைத்து தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் உக்ரைனின் பல இடங்களில் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதற்கு கைமாறாக தற்போது ஈரானுக்கு, ரஷ்யா உதவி செய்துள்ளது. முன்னதாக இந்த தகவலை நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இதன்மூலம் ஈரான் போரில் நேரடியாக தலையீடு செய்யாவிட்டாலும் நட்பு நாடு என்ற வகையில் ஈரானுக்கு உளவு தகவல்களை அதிபர் விளாடிமிர் புதின் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications