ஈராக்கில் அடுத்தடுத்து முன்னேறும் தீவிரவாதிகள்! பாக்தாத், கர்பாலா நகரங்கள் வீழ்கின்றன!!
பாக்தாத்: ஈராக்கில் அல்கொய்தாவின் தொடர்புடைய ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் மொசூல் நகரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல நகரங்களை தங்கள் வசமாக்கி வருகின்றனர். தலைநகர் பாக்தாத் எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் வசம் விழக் கூடும் என்று கூறப்படுகிறது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. அல்கொய்தாவின் துணை அமைப்பான இந்த இயக்கம் ஈராக் மற்றும் சிரியாவின் ஒரு பகுதியை இணைத்து இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்க முயற்சித்து வருகிறது.
ஏற்கனவே இந்த இயக்கம் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் வசம் கைப்பற்றி வைத்துள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் ஈராக்கில் 2-வது பெரிய நகரான மொசூல் நகரை அவர்கள் கைப்பற்றினார்கள். சுமார் 5 ஆயிரம் தீவிரவாதிகள் திடீரென நகரின் பல்வேறு பகுதிகளுக்குள் புகுந்து ஒட்டுமொத்த நகரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

5 லட்சம் பேர் வெளியேற்றம்
இதையடுத்து அங்கிருந்த அரசு படைகள் மற்றும் போலீசார் தப்பி ஓடினார்கள். அவர்களுடன் அந்த நகரில் வசிக்கும் 5 லட்சம் மக்களும் வெளியேறி உள்ளனர். தற்போது மொசூல் நகரம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

துருக்கி தூதரகம்
மொசூல் நகரில் இருந்த துருக்கி நாட்டின் தூதுரகத்தை கைப்பற்றிய தீவிரவாதிகள் அங்கிருந்த 50 ஊழியர்களை சிறைப்பிடித்து சென்றனர். அவர்கள் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. மொசூல் நகரில் 15 ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் பிடித்து சென்றனர். பின்னர் அவர்களை தூக்கிலிட்டு கொன்றார்கள்.

திக்ரீத்
இதற்கிடையே ஈராக்கின் இன்னொரு முக்கிய நகரமான திக்ரீத்தையும் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இது ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊராகும். நகரின் 4 பகுதி வழியாக புகுந்த தீவிரவாதிகள் அரசு படைகளை தாக்கிவிட்டு நகரை கைப்பற்றினார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் தெருக்களில் தீவிரவாதிகளுக்கும், ஈராக் அரசு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

சமரா
அதைத் தொடர்ந்து மற்றொரு முக்கிய நகரான சமராவும் இப்போது தீவிரவாதிகள் வசமாகீவிட்டது. இதற்கிடையே தீவிரவாதிகளின் தளபதி அபுமுகமது அல்அதானி பேசிய ஆடியோ ஒன்று இணையதளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆடியோ செய்தி
அதில் ஈராக்கில் அனைத்து நகரங்களையும் நாங்கள் கைப்பற்றுவோம், அடுத்ததாக தலைநகரம் பாக்தாத், கர்பாலா நகரங்களை கைப்பற்ற போகிறோம். முக்கிய இடங்களை கைப்பற்றும் நாங்கள் எங்கள் குறிக்கோளை நிறைவேற்றுவோம் என்று கூறியுள்ளார். இந்த ஆடியோவில் அவர் 15 நிமிடம் பேசி இருக்கிறார்.

பதிலடி தருவோம்
தீவிரவாதிகள் திடீரென முக்கிய நகரங்களை அடுத்தடுத்து கைப்பற்றி இருப்பது ஈராக் அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஈராக் பிரதமர் கூறும்போது, ‘ஈராக்கில் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள நகரங்களை விரைவில் மீட்போம். அரசு படைகள் கடுமையான பதிலடி கொடுக்கும். தீவிரவாதிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்படும்' என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவிடம் உதவி
மேலும் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள நகரங்களை மீட்க உதவும்படி அமெரிக்காவை ஈராக் கேட்டுக் கொண்டுள்ளது. தீவிரவாதிகள் மீது உடனடியாக விமான தாக்குதலை தொடங்கும் படியும் ஈராக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்கா இதுவரை விமான தாக்குதலை தொடங்கவில்லை.

பாக்தாத்தை நோக்கி..
தீவிரவாதிகள் தற்போது தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறிச் செல்வதால் அந்த நகர் எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் வசமாகலாம். தற்போது ஈராக் நிலவரத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இங்கிலாந்தும் அமெரிக்காவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications