ஐ.எஸ். தீவிரவாதிகள் விரட்டியடிப்பு- ரமாடி நகரை மீட்டதாக ஈராக் ராணுவம் பிரகடனம்!
பாக்தாத்: ஈராக்கின் ரமாடி நகரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டதாக அந்நாட்டு ராணுவம் பிரகடனம் செய்துள்ளது. கடந்த 18 மாதங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான ஈராக்கின் முதலாவது வெற்றி இதுவாகும்.
ஈராக், சிரியாவின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம், தனி இஸ்லாமிய நாட்டை பிரகடனப்படுத்தியது. இதேபோல் பல்வேறு நாடுகளின் பகுதிகளையும் கைப்பற்றும் வகையில் உக்கிரமான தாக்குதல்களை அண்டை நாடுகளின் மீதும் ஐ.எஸ். இயக்கம் மேற்கொண்டு வருகிறது.

ஆனால் ஐ.எஸ். இயக்கத்தை ஒழிக்கும் வகையில் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. அத்துடன் ஈராக் படையினர் இழந்த நகரங்களை மீட்கும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை அளித்தும் வருகின்றன.
இதன் ஒருபகுதியாக ஈராக்கின் மிக முக்கியமான ரமாடி நகரை மீட்பதற்காக கடந்த பல வாரங்களாக பயங்கர யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்தின் முடிவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ரமாடி நகரில் இருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ரமாடி நகரை முழுமையாக மீட்டுவிட்டதாக ஈராக் ராணுவம் பிரகடனப்படுத்தியுள்ளது. அந்த நகரத்தின் பாதுகாப்பு பணிகளை வழக்கம்போல் போலீசார் மேற்கொள்வர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான 18 மாத யுத்தத்தில் ஈராக் ராணுவத்தின் முதலாவது வெற்றி இதுவாகும்.
ரமாடியைத் தொடர்ந்து ஐ.எஸ். தீவிரவாதிகளின் உயிர்நாடியாக கருதப்படும் மோசூல் நகரை மீட்கும் வகையிலான அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது ஈராக் ராணுவம்.












Click it and Unblock the Notifications