Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காணாமல் போன சீன அதிபர்.. கைமாறும் அதிகாரம்.. இந்தியாவுக்கு ஆபத்தா?

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: சீன அதிபர் ஜீ ஜின்பிங் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 5-ஆம் தேதி வரை காணவில்லை, அவருக்கு உடல்நலன் சரியில்லையா? அவர் அதிபர் மாளிகையில் இருந்தாரா? அல்லது வீட்டுச்சிறையில் இருந்தாரா? என்பதையெல்லாம் தாண்டி சீனாவில் இருந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே தான் வங்க் யாங் என்பவர் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு ஏதும் ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

சீனாவிலிருந்து செய்திகள் வெளிவருவது என்பதே அரிதிலும் அரிதான ஒன்று. உலக அளவில் இருக்கும் கூகுள், எக்ஸ், பேஸ்புக் போன்ற தளங்களே சீனாவில் கிடையாது. அந்த நாட்டுக்கென பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட தளங்கள் மட்டும்தான் அந்நாட்டில் உண்டு. இருப்பினும் இப்போது சீனாவில் இருந்து வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி ரகத்தை சேர்ந்தவை.

is-chinese-president-missing-may-power-to-be-shifted-is-it-a-danger-for-india-detailed-report

தற்போதைய சீன அதிபர் ஜீ ஜின்பிங் கடந்த மே மாதத்தில் இரண்டாவது வாரம் காணாமல் போனார் என்ற செய்தி உலக அரங்கை சற்று அதிர்வுக்கு உள்ளாக்கியது. மே மாதம் 21 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 5-ஆம் தேதி வரை வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனாவின் அதிபரை காணவில்லை, அவருக்கு உடல்நலன் சரியில்லையா? அவர் அதிபர் மாளிகையில் இருந்தாரா? அல்லது வீட்டுச்சிறையில் இருந்தாரா? என்பதையெல்லாம் தாண்டி சீனாவில் இருந்தாரா என்ற கேள்விகளைக் கூட இப்போது எழுப்பியுள்ளது.

முப்பெரும் தலைவர்

சீனாவை பொருத்தமட்டில் மூன்று முக்கிய அமைப்புகள் மிகவும் சக்திவாய்ந்தவை. அவை CPC என்றழைக்கப்படும் கம்யுனிஸ்ட் பார்டி ஆஃப் சைனா, இரண்டாவதாக நாட்டின் அதிபர் பொறுப்பு, அடுத்ததாக மூன்றாவது இடத்தில் CMC அதாவது சென்ட்ரல் மிலிட்டரி கமிஷன் என்ற அமைப்புகள். இந்த மூன்றின் தலைவராக இருப்பவரே சீனாவின் சக்தி மிக்க தலைவராக கருதப்படுவார். அதாவது சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக இருப்பவரே அந்நாட்டின் அதிபராகவும் இருப்பார்.

அடுத்ததாக ஒட்டுமொத்த ராணுவத்தையும் கட்டுபடுத்தும் அமைப்பு CMC. இதன் தலைவரும் நாட்டின் அதிபரே, இப்படி மூன்று அமைப்புகளின் தலைமைப் பீடத்தில் இருந்து வந்த சீன அதிபர் இரண்டு வாரங்கள் காணமல் போனது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மூன்று முக்கிய அமைப்புகளின் ஒட்டு மொத்த தலைவராக ஜீ ஜின்பிங் இருந்தாலும் கட்சித் தலைவர் மற்றும் நாட்டின் அதிபர் என்ற இரு முக்கிய பொறுப்புகளில் இருப்பதனால் ராணுவத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை CMC -ன் துணைத் தலைவருக்கு வழங்கியுள்ளது அந்நாடு.

இந்த துணைத்தலைவர் பொறுப்பில் இப்போது இருப்பவர் ஜாங் யூசியா, சீன கம்யுனிஸ்ட் கட்சியில் மூன்றாவது முறையாக ஜீ ஜின்பிங் பொது செயலாளராக வருவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்தான் இந்த ஜாங் யூசியா. ஆனால் நிலவரம் இப்போது கலவரமாக மாறிவிட்டதால் ஜாங் யூசியாவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். இதுதான் ஜீ ஜின்பிங்கின் அடித்தளத்தை அசைத்து பார்த்துவிட்டது.

மாபெரும் சக்தி ஜீ ஜின்பிங்

01-10-1949 ஆம் ஆண்டு சீனாவில் சீன மக்கள் குடியரசு என்ற கட்சியை நிறுவிய மாவோதான் சீனாவில் ஜீ ஜின்பிங்கிற்கு முன்னர் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்தவர். இந்த மாவோவின் நெருங்கிய நண்பரும் சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களுள் ஒருவருமான ஜீ ஸாங்க் ஷ்வான் என்பவரது மகன்தான் இந்த ஜீ ஜின்பிங்.

மாவோவின் ஆட்சிக் காலத்தில் 1966 முதல் 1976 வரை சீனாவில் நடைபெற்ற கலாச்சாரப் புரட்சியால் கல்விக்காக இடம்பெயர்ந்த ஜீ ஜின்பிங் 1974 ஆம் ஆண்டு கம்யுனிஸ்ட் கட்சியில் இணைகிறார். அதன்பின்னர் படிப்படியாக உயர்ந்து 1980 -ல் ஃபியுஜியான் மாநில ஆளுநராக நியமிக்கப்படுகிறார். தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு சீனாவின் துணை அதிபராக தேர்வு செய்யப்படுகிறார். அதன் பின்னர் 2012 ஆம்

ஆண்டு சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார். 2013 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் தலைவராகவும் பொறுப்பேற்றார் ஜீ ஜின்பிங், அன்று முதல் இன்றுவரை சீன அதிபராக தொடர்கிறார். இப்படி சர்வ வல்லமை கொண்ட ஜீ ஜின்பிங்தான் இப்போது இரண்டு வாரங்கள் காணமல் போனதாக உலகம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளார்.

என்னாயிற்று ஜீ-க்கு?

சீனாவை பொறுத்தவரை ஒரு அதிபர் இரண்டு வாரம் காணமல் போனால் அவரது அதிகாரம் கைமாறியுள்ளது என்று பொருள், ஏனெனில் இதற்கு முன் சீனக் கம்யுனிஸ்ட் கட்சி 3 தலைவர்களின் அதிகாரத்தைப் பறித்து அவர்களையும் வெறும் பொம்மை அதிபர்களாக மாற்றிய வரலாறு உண்டு. இந்த நிலையில் ஜீ ஜின்பிங்கும் காணமல் போனதை அவரை சிறை பிடிக்கப் பட்டிருக்கலாம் அல்லது அவர் மிரட்டப்பட்டு இருக்கலாம் என்று சர்வதேசங்களும் விவாதித்துக் கொண்டிருக்கின்றன.

ஜூன் 5 க்குப் பிறகு சீனாவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்டாலும், அவருக்கான் அணிவகுப்பு மரியாதை இல்லை, பீப்பிள்ஸ் டெய்லி-யின் முதல் பக்கத்தை எப்போதும் நிரப்பும் அதிபரின் புகைப்படங்கள் இப்போது இல்லை. பிற நாட்டு விருந்தினர்களையும் வி.ஐ.பி.களையும் சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் பிற மூத்தத் தலைவர்கள்தான் வரவேற்கிறார்கள்.

இதுமட்டுமல்லாது அதிபருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு பாதியாக குறைக்கப்பட்டதோடு, அவரது தந்தையின் கல்லறைக்குக் கொடுக்கப்பட்டு வந்த அதிகாரப்பூர்வ அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் தற்போது நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக அந்நாட்டு பிரதமர் லீ கியாங் பங்கேற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் அதிபர் கலந்து கொள்ளாத முதல் பிரிக்ஸ் மாநாடு இதுவே. இவையனைத்தும் தான் ஜீ ஜின்பிங் மீதான சந்தேகளுக்கு காரணம்.

ஜீ-ன் சித்துவிளையாட்டுகள்

சீனாவில் ஒரு நபர் இரண்டு முறை மட்டுமே சீனாவின் அதிபராக இருக்கமுடியும் என்ற விதி இருந்தது. சீனாவின் நிரந்தர தலைவராக வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜீ ஜின்பிங் 2018 ஆம் ஆண்டு இந்த விதியை மாற்றுகிறார். இந்த இடத்தில் ஒரு செய்தியை நாம் கவனிக்க வேண்டும் அதாவது சீன கம்யுனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக இருப்பவர்தான் அந்நாட்டின் அதிபராகவும் இருக்க முடியும். ஆகவே ஜீ அடுத்ததாக குறி வைத்தது கட்சியின் பொது செயலாளர் பதவிக்கான விதியில், 2002 ஆம் ஆண்டு முதல் கட்சியிலும் 68 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒய்வு பெறவேண்டும் என்ற விதி உள்ளது.

இதையும் தனக்கு சாதகமாக்குகிறார் ஜீ. இருபது வருடங்களாக இருந்த கட்சியின் விதியை தனக்கும் தன் ஆதரவாளர்களின் வசதிக்காகவும் அந்த விதியை நீக்குகிறார். இதனால் 69 வயதான ஜீ கட்சியில் தொடர்ந்து பணியாற்றலாம் என்ற நிலை உருவாகிறது. இப்படியாக வந்த பந்துகள் அனைத்தையும் பவுண்டரிக்கு விரட்டி விளையாடிய ஜீ தனக்கு எதிராக வருபவர்களை இனம் கண்டு அவர்களை கருவறுப்பதிலும் கவனமாகவே இருந்துள்ளார்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் 16-10-2022 முதல் 22-10-2022 வரை சீன கம்யுனிஸ்ட் கட்சியின் 20 வது தேசிய மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் சீனாவின் முன்னாள் அதிபர் ஹூ ஜின்டாவோ கலந்து கொள்கிறார். ஜீ அமர்ந்திருக்கும் அதே முன்வரிசையில் ஜீ-யின் இடது புறத்தில் வந்தமர்கிறார் ஹூ ஜிண்டாவோ, வந்தமர்ந்தவர் அமைதியாக இருந்து எழுந்து சென்றிருந்தால் எதுவும் நடந்திருக்காது, அவரோ ஜீ-யின் மேஜை மீது இருக்கும் சில ஆவணங்களை பார்வையிட முயல்கிறார். இதனால் ஜீ-யின் பாதுகாவலர்கள் உடனடியாக ஓடோடி வருகிறார்கள்.

வந்தவர்கள் ஹூ ஜிண்டாவோவின் கையை பிடித்து அவரை வெளியேற்றுகிறார்கள். ஹூ-வும் வெளியேறுவதற்கு முன்னர் ஜீ-யிடம் ஏதோ சொல்ல முயல்கிறார். ஆனால் ஜீ ஒரு அலட்சிய சிரிப்போடு அதை கடந்து சென்றுவிடுகிறார். உலகம் முழுவதும் இது பெரும் பேசு பொருளாகிறது. அந்த அரங்கில் இருந்து அவமானப்பட்டு வெளியேறுகிறார் முன்னாள் அதிபர் ஹூ

விதிகளை மாற்றியவரின் வாழ்க்கையில் விளையாடிய விதி

ஜீ, சீனக் கம்யுனிஸ்ட் கட்சியில் மூன்றாவது முறையாக பொது செயலாளராக வருவதற்கு எந்த ஜாங் யூசியா உதவி செய்தாரோ, அவர் இப்போது ஜீ-க்கு எதிராக வாளேந்தி வருகிறார். அதாவது CMC ன் துணைத்தலைவராக ராணுவத்தின் அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் ஜாங் யூசியா ஜீ-யோடு ஏற்பட்ட உரசல்கள் காரணமாக ஹூ ஜிண்டாவோவின் முகாமுக்கு மாறிவிட்டார். விளைவு ஜீ-யின் ஆதரவளர்களாக இருந்த ராணுவ உயரதிகாரிகள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவில் இப்போது வேலையில்லாத் திண்டாட்டம் 15% அளவுக்கு வளர்ந்து விட்டது. ரியல் எஸ்டேட் துறையிலும் கடும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. செமி கண்டக்டர் துறையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சி, 50 லட்சம் கோடி டாலர் என்ற அளவில் உயர்ந்துள்ள சீனாவின் கடன் சுமை, இதனால் ஏற்பட்டுள்ள நிலையற்ற பொருளாதார நிலை, இந்த பொருளாதார சீர்குலைவுக்கு எதிராக ஆங்கங்கே வெடித்துள்ள போராட்டங்கள் ஆகியவையே சீன அதிபருக்கு எதிராக திரும்பியுள்ளா ஆயுதங்கள் என சீன ஆரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அடுத்த அதிபர் யார்?

நானின்றி அணுவும் அசையாக்கூடாது என்பதில் கவனமாக இருந்த ஜீ -யின் பதவி இனிமேல் வெறும் அலங்காரப் பதவியாக மட்டுமே இருக்கும் என்கின்றனர் சீனாவின் அரசியல் உல் விவரங்கள் அறிந்தவர்கள். ஜீ. இன்னும் கொஞ்ச நாட்கள் அதிபராகவே தொடர்வார். ஆனால் அதிகாரங்கள் எதுவும் இருக்காது. அதாவது மாப்பிள்ளை அவர்தான் சட்டை அவரோடது இல்லை என்ற நிலைதான்.

இதன் அடுத்த விளைவாக வங்க் யாங் என்பவர் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். வங்க் யாங் 2018 முதல் 2023 நேஷனல் கமிட்டி ஆஃப் தி சைனீஸ் பீப்பிள்ஸ் பொலிட்டிக்கல் கன்சல்டட்டிவ் கான்பிரன்சின் சேர்மனாக வரை பணிபுரிந்தவர். அதோடு சீன கம்யுனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவில் ஸ்டான்டிங் கமிட்டியில் 4 வது நிலையில் உள்ளார்.

இந்தியாவுக்கு ஆபத்தா?

சீனாவில் நிலவி வரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு காரணிகள் சீன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளளது. இந்த அதிருப்தியை மறைக்க அண்டை நாடுகளோடு பிரச்னையை ஏற்படுத்தி மறைக்கும் செப்படி வித்தையை நன்றாக அறிந்த நாடு சீனா. ஆகையால் நமது நாட்டுக்குள் ஊடுருவ வாய்ப்பு அதிகம்.

ஏற்கனவே 2002 முதலே லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் அருகே ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என சீனாவின் பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மியின் கமாண்டர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே மீண்டும் அருணாசலப்பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் சீனப் படைகள் உள்ளே வரும் ஆபத்துகளும் உள்ளது. இப்படி எல்லையில் பரபரப்பையும் பதற்றத்தையும் உருவாக்குவதன் மூலம் உள்ளூர் மக்களின் கோபத்தை திசை திருப்பலாம்

என்பது சீனாவின் திட்டமாக இருக்கலாம் என எச்சரிக்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள், அதொடு சீனா நம் நாட்டின் மீது சைபர் தாக்குதலை தொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்தியாவின் இமேஜை கெடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் சீனா அதை இன்னும் அதிகப்படுத்தும். அதோடு ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கேட்டு வரும் இந்தியாவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடவும் சீனா பிரம்ம பிரயத்தனம் செய்யும் என்பதில் ஐயமில்லை. ஆகவே கவனமாக இருக்கும் நம் நாடு இன்னும் கூடுதல் கவனமாக இருக்கவேண்டிய தருணத்தில் இருக்கிறோம் என்பதுவும் உண்மை.

கட்டுரையாளர்-அ.ஜெ.ராஜசேகர் (ஊடகவியலாளர்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+