‘மூளை’அப்படியே பிரஷ்ஷா இருக்காம்.. கொஞ்சம் கூட யோசிக்காமல் கூகுளை "மலை" போல நம்புவதால்!
மாஸ்கோ: கூகுள் தேடல் எந்திரம் வந்தது முதலே மக்கள் மூளைக்கு வேலை கொடுப்பதில்லையாம். சுயமாக யோசிக்க வேண்டும் என்று கூட யோசிக்காமல் சர்ச் எந்திரத்தில் தேட ஆரம்பித்து விடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
எந்த கேள்விக்கும் பதில் இணையத்தில் கிடைத்து விடுகிறது. இதற்கு கூகுள் போன்ற தேடல் என்ஜின்கள் பெரிதும் உதவுகின்றன. ஆனால், இவற்றால் மூளைக்கு கெடுதியே என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மிக்சி, கிரைண்டர் போன்ற இயந்திரங்களின் கண்டுபிடிப்புகளால் எப்படி உடல் உழைப்பு குறைந்து, உடல் பருமனால் மக்கள் அவதிப்படுகிறார்களோ, அதேபோல், இது போன்ற தேடல் என்ஜின்களால் மூளைக்கு வேலை தருவது குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கவலை...
மேலும், சிந்திக்கும், யோசிக்கும் திறன் குறைந்து விட்டதாகவும், மூளைக்கு வேலை தருவது குறைந்து போய் விட்டதாகவும் ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
ரஷ்ய ஆய்வு...
இந்த சர்வதேச ஆய்வானது ரஷ்யாவின் கஸ்பர்ஸ்கை ஆய்வகத்தால் நடத்தப்பட்டது. இதில் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 6 ஆயிரம் மக்கள் பங்கேற்றனர்.
நம்பிக்கை...
இந்த ஆய்வின் முடிவில் சுமார் 40 சதவீதம் மக்கள் தங்களுக்கு ஏற்கனவே தெரிந்த பதிலை நினைவுக்கூர மறுத்து, உடனடியாக கூகுளின் உதவியைத் தான் நாடுகிறார்களாம். இணையத்தில் கிடைக்கும் பதில் சரியானதாகத் தான் இருக்கும் என்பது இவர்களின் நம்பிக்கையாம்.
மறதி...
12 சதவீதம் பேருக்குத்தான் அதை நினைவில் வைத்து பதிலளிக்கிறார்களாம். 25 சதவீதம் பேர் பதிலைச் சொன்ன வேகத்தில் மறந்து போய் விடுகிறார்களாம்.
நீண்டகால நினைவுகள்...
இணையத்தில் துரிதமாக கிடைக்கும் பதிலாலேயே மக்கள் யோசிக்க மறந்து வருவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் நீண்ட கால நினைவுகள் அழியும் தாக்கங்கள் ஏற்படுவதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.
டிஜிட்டல் அம்னீசியா...
மேலும், இந்த துரித ஞாபக மறதியை ஆய்வாளர்கள் டிஜிட்டல் அம்னீசியா என அழைக்கிறார்கள். இதன் பொருள் வேகமாக தேவையான தகவல்களைத் தந்து அதனை உடனடியாக மறக்கச் செய்வதாகும்.
வருத்தம்...
கூகுள் மக்களை மூளை மழுங்கிப் போனவர்களாக மாற்றி வருவதாகவும் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கூகுள் புத்திசாலி பரம்பரையை காலி செய்து விட்டதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.