இஸ்ரேல் செய்த 'நரி' வேலை.. நெதன்யாகு-வின் அரசியல் எதிரி சொன்ன முக்கிய தகவல்!
ஈரானில் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் கடந்த ஆண்டு இறுதியில் மக்கள் போராட்டம் வெடித்தது. ஆனால் பெரும் முயற்சிக்கு பின்பு ஈரான் அரசு அதை கட்டுப்படுத்தி ஆட்சி மற்றும் அதிகாரத்தை கைப்பற்றியது. இந்த நிலையில் ஈரான் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் ஆயிரக்கணக்கான ஸ்டார்லிங்க் இண்டர்நெட் சேவையை அளிக்கும் கருவிகளை ரகசியமாக ஈரானுக்குள் கடத்தியதாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட் தெரிவித்திருப்பது மத்திய கிழக்கு அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் மக்கள் போராட்டம் வெடித்த பின்பு ஈரான் அரசு அந்நாட்டில் இண்டர்நெட் சேவைக்கு தடை விதித்தது, இந்த தடையை மீறி போராட்டக்காரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காக செயற்கைகோள் மூலம் இயங்கும் ஸ்டார்லிங்க் இண்டர்நெட் சேவை கருவிகளை ஈரானுக்குள் இஸ்ரேல் கடத்தியுள்ளதை நப்தாலி பென்னட் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளார்.
ஜெருசலேமில் நடைபெற்ற சர்வதேச கொள்கை மாநாட்டில் பேசிய நப்தாலி பென்னட், ஈரானுக்குள் பத்தாயிரக்கணக்கான ஸ்டார்லிங்க் கருவிகளை கொண்டு செல்லும் திட்டத்தை தாம் தொடங்கியதாக தெரிவித்தார்.

என்ன நடந்தது?
நஃப்டாலி பென்னெட் 2021 முதல் 2022 வரை இஸ்ரேல் பிரதமராக பதவி வகித்தார். அவர் தலைமையிலான அரசு, ஈரானில் பல்லாயிரக்கணக்கான ஸ்டார்லிங்க் ரிசீவர்களை கடத்தி கொண்டு செல்லும் திட்டத்தை தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
இந்த சாதனங்கள் மூலம் ஈரானில் இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் தடையின்றி இயங்கும் என்றும், போராட்டக்காரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார். இதன் இறுதி நோக்கம் ஈரான் அரசை கவிழ்ப்பதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசு ஏன் நிறுத்தியது?
மேலும் இக்கூட்டத்தில் பென்னெட் பேசுகையில், தற்போதைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு இந்த திட்டத்தை நிறுத்திவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். போராட்டங்கள் நடைபெற்றபோது, இந்த உள்கட்டமைப்பு இல்லாததால் பயன்படுத்த முடியவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையாகும். ஈரானில் இது அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்றாலும், எலான் மஸ்க் இந்த சேவை அங்கு இயங்குவதாக கூறியிருந்தார்.
பெஞ்சமின் நெதன்யாகு 2022 முதல் இஸ்ரேல் நாட்டின் பிரதமராக உள்ளார், வருகிற அக்டோபர் மாதம் இஸ்ரேலில் தேர்தல் நடக்கும் காரணத்தால், தற்போதைய அரசு செய்த தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக பென்னெட் பேசினார்.
ஈரானில் போராட்டங்கள் எப்படி தொடங்கின?
ஈரானில் 2025 டிசம்பர் 28 முதல் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. அந்நாட்டில் பொருளாதாரம் முறிவடைந்து, நாணய மதிப்பு கடுமையாக சரிந்ததே இந்த போராட்டங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 1979 புரட்சிக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய போராட்டமாக இது விவரிக்கப்படுகிறது.
ஈரான் அரசு, போராட்டங்கள் நடைபெறும் காலங்களில் பொதுமக்களின் இணைய அணுகலை துண்டித்துவிடும். இதனால் சில ஈரானியர்கள் ஸ்டார்லிங்க் சாதனங்களை பயன்படுத்தியதாக தகவல்கள் அப்போதே வெளியாகின. தற்போது பென்னெட் பேச்சின் மூலம் உறுதியாகியுள்ளது.

இஸ்ரேலில் அரசியல் மாற்றம்
நஃப்டாலி பென்னெட், எதிர்க்கட்சித் தலைவர் யாய்ர் லாபிடுடன் இணைந்து "டுகெதர்" என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். வரும் தேசிய தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
ஸ்டார்லிங்க் ஆபத்தா..?
ஒரு நாட்டின் அரசு போராட்டத்தை அடக்க வேண்டும் என்பதற்காக இண்டர்நெட் முடக்க நினைக்கிறது, என்றால் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் இதை எளிதாக கடந்து இணைய சேவை அளிக்கிறது. இது ஈரான் என்பதால் இதன் தாக்கம் பலருக்கு புரியாது, இதே விஷயம் இந்திய எல்லை பகுதிகளில் குறிப்பாக பாகிஸ்தான், சீன எல்லைகளில் நடந்தால் பெரும் பாதிப்பாக இருக்கும். இதனால் ஸ்டார்லிங்க் சேவை உண்மையில் பாதுகாப்பானதா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications