பற்றி எரியும் ஏமன்.. திடீரென குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்து என்ன?
ஏமன்: இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் சமீபத்தில் ஹவுதி பயங்கரவாதிகள் டிரோன் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி தரும் வகையில், ஹவுதிகள் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் துறைமுகமான ஹொடெய்டாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது பதற்றமான சூழலே நிலவி வருகிறது. ஒரு பக்கம் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான மோதல் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது.

மற்றொருபுறம் ஹமாஸுக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுவான ஹவுதி பயங்கரவாதிகளும் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதல்: அதன்படி இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் சமீபத்தில் ஹவுதி பயங்கரவாதிகள் டிரோன் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே இதற்குப் பதிலடி தரும் வகையில், ஹவுதிகள் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் துறைமுகமான ஹொடெய்டாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
ஏமன் துறைமுகத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் அங்குக் கறுப்பு புகை சூழ்ந்துள்ளது. இஸ்ரேல் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. மேலும் இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் கூறுகையில், "இஸ்ரேல் மக்கள் சிந்தும் ரதத்திற்கு ஒரு விலை உண்டு. அவர்கள் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதில் அளிக்க வேண்டி இருக்கும்.. தாக்குதல்கள் தொடர்ந்தால் பதிலடிகளும் தொடரும்.
இது ஒரு எச்சரிக்கை: காசா போரின் போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறும் அனைத்து பயங்கரவாதிகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை. ஹொடைடாவில் பற்றி எரியும் தீ, மத்திய கிழக்கு முழுவதும் தெரியும். இது அனைவருக்கும் ஒரு வார்னிங்" என்று தெரிவித்தார்.
இஸ்ரேல் நடத்தியிருக்கும் இந்தத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.. மேலும், 87 பேர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்குக் கடுமையான தீக்காயங்கள் இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கடும் பதிலடி: இஸ்ரேலுக்குத் தீங்கு விளைவிப்போருக்குக் கடுமையான பதிலடி தரப்படும் என்றே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தெரிவித்துள்ளார். F-15 ஜெட் விமானங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்தி முடித்தவுடன் இந்த ராணுவ விமானங்கள் இஸ்ரேலுக்குத் திரும்பிவிட்டதாகவும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்தத் தாக்குதலுக்கு ஏமன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. இஸ்ரேல் நடத்தியுள்ள இந்தத் தாக்குதலை ஏற்க முடியாது என்றும் தங்கள் மீது அத்துமீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் ஏமன் சாடியுள்ளது.












Click it and Unblock the Notifications