திடீரென வெடித்த ஜப்பான் எரிமலை... 36 சடலங்கள் மீட்பு - நச்சு வாயு பரவுவதால் மீட்புப் பணியில் தொய்வு
டோக்கியோ: ஜப்பானில் வெடித்துச் சிதறிய எரிமலையிலிருந்து இதுவரை 36 பிரேதங்கள் மீட்கப் பட்டுள்ளன. இதற்கிடையே எரிமலையிலிருந்து நச்சு வாயு வெளியேறுவதாக வெளியான தகவலால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகனோ மற்றும் கிபு பகுதிகளுக்கு இடையில் உள்ளது ஓன்டாகே எரிமலை. அமைதியாக இருக்கும் இந்த மலையின் மீது மலையேற்றக் குழுவினர் பயிற்சி பெறுவது வழக்கம்.

அவ்வாறு நேற்று முன்தினம் அம்மலையில் சுமார் 250க்கும் அதிகமான வீரர்கள் மலையேறும் பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த எரிமலை வெடித்துச் சிதறியது. இதில் மலையேற்ற குழுவினர் சிக்கிக் கொண்டனர்.
இதன் விளைவாக வெளிப்பட்ட தீயின் பிழம்புகளும், சாம்பல் மேகங்களும் அம்மலையின் தென்பகுதியில் மூன்று கி.மீ தொலைவு வரை பரவின. எரிமலையின் மேற்பரப்பில் இருந்து வெளியான சாம்பல் திட்டுகள் மேகங்களில் கலந்து, அப்பகுதி முழுவதையும் இருளில் ஆழ்த்தியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் மீட்புப் படையினர். ஆயினும் மலையின் சரிவுப்பகுதியில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. சிலர் மட்டுமே தங்களது சொந்த முயற்சியில் மலையை விட்டு மெல்ல இறங்கி தரைப்பகுதியை வந்தடைந்தனர்.
நேற்று மட்டும் சுமார் 30 சடலங்களை மீட்புப் படையினர் மீட்டனர். இன்று மேலும் 6 சடலங்களை அவர்க மீட்டுள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் அனைவரும் எரிமலையில் இருந்து வெளியான வெப்பம் கலந்த சாம்பல் தாக்கி மூச்சுத்திணறி மயங்கி உயிரிழந்துள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாம்பலுக்குள் புதைந்து காணாமல் போன மேலும் சிலரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே மலையின் மேல்பகுதியில் சுழன்றடிக்கும் காற்றில் கலந்து, பறந்து வரும் சாம்பலில் இருந்து ஒருவித நச்சுவாயுவும் கலந்துள்ளதால் மீட்புப் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications