காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலை.. 3 இந்தியர்கள் கைது.. வெடிக்கும் புதிய பிரச்சினை.. பரபர
ஒட்டாவா: காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் மூன்று இந்தியர்களை கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியா கனடா இடையே பல காலமாக இருந்த நல்லுறவு கடந்தாண்டு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இப்போது நடக்கும் சம்பவங்களும் இரு நாட்டு உறவுக்கு மேலும் பாதிப்பதாகவே இருக்கிறது.

இந்தியா கனடா உறவு: அதாவது கனடாவில் இருந்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்தாண்டு சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் இந்தியா கனடா உறவும் கூட மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டையும் இந்தியா மொத்தமாக நிராகரித்தது.
3 பேர் கைது: இதற்கிடையே ஹர்தீப் சிங் கொலை தொடர்பாகக் கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங், (28) ஆகிய மூன்று பேரை கனடா போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மூன்று பேரும் ஆல்பர்ட்டா என்ற பகுதியில் வசிக்கும் non-permanent residents என்றும் விசாரணை அதிகாரி மன்தீப் முகர் தெரிவித்தார். அவர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் அந்த மூன்று பேருக்கும் ஒருவரை மற்றொருவருக்குத் தெரியாதாம். இதற்கிடையே இந்திய அரசுடன் அவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். கொலை விசாரணையும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் உதவி ஆணையர் டேவிட் டெபூல் தெரிவித்தார்.
விசாரணை: அவர் மேலும் கூறுகையில், "விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. கைது செய்த உடன் நிலைமை முடிவுக்கு வந்ததாக அர்த்தம் இல்லை. கைது செய்யப்பட்டோருக்கு இந்திய அரசுடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் தேடப்பட்டு வந்த கனடா நாட்டை சேர்ந்த ஹர்தீப் சிங் கடந்தாண்டு ஜூன் 18ஆம் தேதி சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டானது. அதில் மூன்று பேர் ஹர்தீப் சிங் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்துவது வீடியோவில் தெளிவாகப் பதிவாகி இருந்தது.
ஜஸ்டின் ட்ரூடோ: இந்த விவகாரத்தில் தான் இந்தியாவை ஜஸ்டின் ட்ரூடோ சாடியிருந்தார். இதில் இரு நாட்டு உறவு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஹர்தீப் சிங் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக அவர் சொன்னாலும் அதற்கு அவர் எந்தவொரு ஆதாரத்தையும் அளிக்கவில்லை. இருப்பினும், தொடர்ந்து குற்றஞ்சாட்டினார். அதேநேரம் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா மொத்தமாக நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கடந்த வாரம் கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காலிஸ்தான் பிரிவினைவாத முழக்கங்கள் எழுப்பப்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து டெல்லியில் உள்ள துணை உயர் ஆணையரை அழைத்து மத்திய அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஹர்தீப் சிங் கொலை ஒரு முக்கிய பிரச்சினை தான் என்றும் அதைப் புறக்கணிக்கவே முடியாது என்றும் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications