கொஞ்சி பேசாத மம்மி, டாடிகள்.. கொந்தளித்து கிளம்பிய குட்டீஸ்கள்!
பெற்றோர்களுக்கு எதிராக குழந்தைகள் வீதியில் போராட்டம் நடத்தினர்.
ஹம்பர்க்: பின்னே என்னதான் செய்றது? பொறுத்து பொறுத்து பார்த்து கடைசியில போராடவே வந்துட்டாங்க குழந்தைங்க!!
இப்போதெல்லாம் ஸ்மார்ட் போன் இல்லாத ஆட்களே குறைவுதான். காலையில் எழுந்ததிலிருந்து தூங்கிற வரைக்கும் கையில் போன்தான்!! ஒரே வீட்டில் இருந்துகொண்டு வாட்ஸ்அப், ஸ்டேடஸ் பயன்படுத்தும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பெற்றோர்கள்
இந்த போன் வந்த புதிதில் பெரும்பாலும் அனைவரும் குழந்தைகளையே குறை சொன்னார்கள். "எப்ப பார்த்தாலும் கையில் போன், சாப்பிடும்போதும், தூங்கும்போதும்கூட போனிலே இருந்தா எப்படி?" என்று கடிந்து கொண்டார்கள். ஆனால் உண்மையை சொல்லணும்னா, இப்போதெல்லாம் பெரியவர்களும் கையில் செல்போனோடுதான் திரிகிறார்கள்.
பாதிக்கப்படும் குழந்தைகள்
அதனால் இந்த ஸ்மார்ட் போனுக்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது. கிட்டத்தட்ட போனுக்கு அடிமை ஆகி விட்டோம். பெரியவர்கள் தங்கள் குழந்தைகளிடம் நேரத்தை செலவிடுவது கிடையாது. அந்த குழந்தைகளை சரியாக கொஞ்சுவதும், அரவணைப்பதும் கிடையாது. இளம் வயது பிள்ளைகள் இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டே உள்ளனர்.
குட்டி தலைவன் எமில்
ஜெர்மனியில் இது போராட்டமாகவே வெடித்து விட்டது. அங்கே ஹம்பர்க் நகரில், குழந்தைகள் எல்லாம் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்து விட்டனர். காரணம் என்னவென்றால், அவர்களது பெற்றோர்கள் இந்த குழந்தைகளை சரியாக கவனிக்காமல் எப்பவுமே செல்போனிலேயே இருக்கிறார்களாம். அதனால் ஸ்மார்ட்ஃபோனுக்கு எதிராக இந்த போராட்டத்தில் குழந்தைகள் குதித்தனர். இந்த போராட்டத்துக்கு ஒரு தலைவனும் உண்டு. அவனது பெயர் எமில். அந்த குட்டி தலைவருக்கு வயதோ ஏழு.
எதிரான கோஷங்கள்
எமில் தலைமையில் ஒன்று சேர்ந்த அந்த பகுதி சிறுவர்கள், கையில் பதாகைககளை வேறு ஏந்தி இருந்தார்கள். அதில், "போராட்ட களத்தில் நாங்கள் இங்கே தான் இருக்கிறோம். உங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்புகிறோம். ஏனென்றால் நீங்கள் எப்போதும் மொபைல் போன்களை மட்டும்தான் பார்த்து கொண்டு இருக்கிறீர்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.
நெத்தியடி போராட்டம்
உண்மையிலேயே இந்த சிறுவர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? பெற்றோர்கள் தங்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை என்று எவ்வளவு ஏக்கம்?? மனதளவில் எவ்வளவு பாதிப்புகள்?? இந்த சிறுவர்களின் நெத்தியடி போராட்டம், ஜெர்மன் பெற்றோர்களுக்கு மட்டும் இல்லை... உலகம் முழுவதும் பிள்ளைகளை பெற்றவர்களுக்கும் சேர்த்துதான்!
ம்ம்ம்... நம்ம ஊரில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகவும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் போராடி கொண்டிருக்கிறோம்...!