பைப்லைன் வழியாக பலநாள் பயணம்.. உக்ரைனை ஓடவிட்ட ரஷ்ய வீரர்கள்.. சிலிர்க்க வைக்கும் சீக்ரெட் ஆபரேஷன்
மாஸ்கோ: ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் என்பது தீவிரமாகி உள்ளது. ஒருபக்கம் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இருநாடுகளும் உக்கிரமாக தாக்கி வருகின்றன. இந்நிலையில் தான் உக்ரைன் கைப்பற்றிய குர்ஸ்க் மாகாணத்தை மீட்க ரஷ்ய படை வீரர்கள் 15 கிமீ தொலைவுக்கு கியாஸ் பைப்லைன் வழியாக தவழ்ந்துபோய் மேற்கொண்ட சீக்ரெட் ஆபரேஷன் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி மொத்த உலகத்தையும் அதிர வைத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 3 ஆண்டுகளை கடந்தும் போர் புரிந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யா, உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். டிரம்ப் உத்தரவின்பேரில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா

இருநாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். டிரம்ப் தொலைபேசியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் போர் நிறுத்தம் பற்றி பேசி உள்ளார். அதன்பிறகு ரஷ்யா, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சவுதியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நேற்று மீண்டும் சவுதியின் ஜெட்டா நகரில் உக்ரைன் - அமெரிக்க பிரதிநிதிகள் 3 மணிநேரத்துக்கும் மேலாக போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடரும் தாக்குதல்
இந்த 2 பேச்சுவார்த்தையில் ரஷ்யா, உக்ரைன் தரப்பு கருத்துகளை அமெரிக்கா கேட்டறிந்துள்ளது. இதன்மூலம் அடுத்தக்கட்டமாக போர் நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளுடன் முக்கிய மீட்டிங்கை அமெரிக்கா நடத்தும். இதனால் விரைவில் போர் நிறுத்தம் என்பது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் தான் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் என்பது தீவிரமாகி உள்ளது. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா நிறுத்துவதாக அறிவித்து இருந்தாலும் கூட அந்த நாட்டு படைகள் ரஷ்யா மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்யாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் நிறுத்தத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
அதிக இடத்தை இழந்த ரஷ்யா
இப்படியான சூழலில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதுதான் ரஷ்யாவின் சீக்ரெட் ஆபரேஷன். அதாவது உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. அதேபோல் உக்ரைன் வீரர்களும் ரஷ்யாவின் குர்ஸ்க் மகாணத்தின் பல கிராமங்களை கைப்பற்றினர். இந்த மாகாணம் என்பது ரஷ்யா - உக்ரைன் எல்லையில் உள்ளது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் மேற்கு எல்லையில் இந்த குர்ஸ்க் மாகாணம் என்பது உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குர்ஸ்க் மாகாணத்தின் பல இடங்களை உக்ரைன் கைப்பற்றியது. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் குர்ஸ்க் மாகாணத்தின் 1300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உக்ரைன் கைப்பற்றி உள்ளது. 2ம் உலகப்போருக்கு பிறகு இவ்வளவு பெரிய ஏரியாவை ஒரு நாட்டிடம் ரஷ்யா இழந்தது இதுதான் முதல் முறை. இது ரஷ்யாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.
உக்ரைனுக்கு சாதகம்
அதேவேளையில் ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாண பகுதியை அந்த நாட்டுக்கு எதிரான துருப்புச்சீட்டாக பயன்படுத்த உக்ரைன் திட்டமிட்டது. ஏனென்றால் தற்போதைய போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் இந்த குர்ஸ்க் பகுதியை மையப்படுத்தி ரஷ்யாவிடம் தாங்கள் இப்போது இழந்த பகுதியை உக்ரைனால் மீட்க முடியும் என்று ஜெலன்ஸ்கி நம்பினார்.
அதாவது உக்ரைனில், ரஷ்யா கைப்பற்றி பகுதிகளை கொடுத்துவிட்டு குர்ஸ்க் பகுதியை உக்ரைனிடம் இருந்து வாங்கி கொள்ளலாம் என்று ரஷ்யாவிடம் டீல் பேச வசதியாக இருக்கும். ஆனால் இதனை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரும்பவில்லை. உக்ரைனிடம் டீல் பேசுவதா? வாய்ப்பே இல்லை என்று அவர் வேறு திட்டத்தை யோசித்தார்.
மாற்றி யோசித்த ரஷ்யா
குர்ஸ்க் பகுதியை எப்படியாவது உக்ரைனிடம் இருந்து மீட்க வேண்டும் என்பதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மிகவும் உறுதியாக உள்ளார். அதோடு போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கு முன்பே உக்ரைனிடம் தங்களது பகுதி எதுவும் இருக்க கூடாது. ரஷ்யாவிடம் தான் உக்ரைனின் பல பகுதிகள் இருக்க வேண்டும் என்று புதின் விரும்பினார். இதனால் தங்களுக்கு சொந்தமான குர்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஏரியாக்களை கைப்பற்ற விளாடிமிர் புதின் முடிவு செய்தார். இதுதொடர்பாக முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் குர்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் வசம் உள்ள பகுதிகளை மீட்பது என்பது ரஷ்யாவுக்கு அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை. ஏனென்றால் குர்ஸ்க் பகுதியில் பல ஆயிரம் வீரர்களை உக்ரைன் குவித்து வைத்திருந்தது. அவர்களை தாண்டி ரஷ்யா செல்வது என்பது சற்று கடினமான விஷயமாக இருந்தது.
அப்படியென்றால் உக்ரைன் வீரர்களிடம் சிக்காமல் குர்ஸ்க் பகுதிக்குள் எப்படி நுழைந்து தாக்குதல் நடத்துவது? என்பது பற்றி ரஷ்யா விரிவான ஆலோசனை மேற்கொண்டது. அப்போது தான் புதிய ஐடியா வந்தது. அந்த ஐடியாவை செயல்படுத்த வேண்டும் என்றால் ரஷ்ய படை வீரர்கள் பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டும். அதாவது 1.20 மீட்டர் விட்டம் கொண்ட கியாஸ் பைப் லைன் வழியாக 15 கிலோமீட்டர் பயணித்தால் உக்ரைன் வீரர்களின் கண்களுக்கு புலப்படாமல் ரஷ்ய வீரர்களால் குர்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள சுட்சா நகரை அடைய முடியும் என்பதை ரஷ்யா உணர்ந்தது.
பைப் வழியாக பயணம்
இந்த பைப் லைன் என்பது ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கியாஸ் சப்ளைக்காக போடப்பட்டுள்ளது. இது குர்ஸ்க் மாகாணம் வழியாக தான் செல்கிறது. உக்ரைன் போரால் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. இதற்கு பதிலடியாக ஐரோப்பிய நாடுகளுக்கு கியாஸ் சப்ளையை ரஷ்யா நிறுத்தி உள்ளது. இதனால் இந்த கியாஸ் பைப்லைனை பயன்படுத்தி குர்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டது.அதன்படி ரஷ்யாவின் சிறப்பு படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் பிரத்யேக பயிற்சி மேற்கொண்டனர். அதோடு கியாஸ் பைப்லைன் வழியாக ரஷ்ய வீரர்கள் பயணத்தை தொடங்கினர்.
1.20 மீட்டர் விட்டம் கொண்ட பைப் லைனில் தங்களுக்கு தேவையான ஆயுதங்கள், உணவு பொருட்களை எடுத்து கொண்டு 100க்கும் அதிகமான வீரர்கள் சுட்சா நகரை நோக்கி சென்றனர். பைப்புக்குள் இருட்டு சூழ்ந்து இருக்கும் என்பதால் தலையில் லைட் மாட்டி இருந்தனர். அதேபோல் கியாஸ் சென்ற இடம் என்பதால் அதில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கான உபகரணங்களையும் பயன்படுத்தி இருந்தனர்.15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குர்ஸ்க் மகாணத்தின் சுட்சா நகரை பலநாள் பயணத்துக்கு பிறகு அவர்கள் அடைந்தனர். பைப்லைனில் ஊர்ந்து ஊர்ந்தும், குனிந்தபடியும் இந்த பயணத்தை ரஷ்ய வீரர்கள் நிறைவு செய்தனர்.

சுட்சா நகரில் என்ட்ரி
சுட்சா நகரில் இறங்கிய ரஷ்ய படை வீரர்கள் அதிரடியாக உக்ரைன் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ரஷ்யா தங்களை தரைப்படை, விமானப்படை மூலமாக தான் தாக்க முடியும் என்று நினைத்து கொண்டிருந்த உக்ரைன் வீரர்களுக்கு ரஷ்யாவின் இந்த யுக்தி என்பது பெரிய ஷாக்கை கொடுத்தது.
இந்த சண்டையில் 3 கிராமங்களை முதற்கட்டமாக ரஷ்யா மீட்டது. அதன்பிறகு நேற்றைய நிலவரப்படி உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள 32 பகுதிகளை ரஷ்யா மீட்டு இருந்தது. நேற்றும் உக்ரைன் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய மேலும் பல இடங்களை ரஷ்யா கைப்பற்றியது. அந்த பகுதியில் ரஷ்யா - உக்ரைன் இடையே கடும் மோதல் என்பது ஏற்பட்டுள்ளது.
அதிர்ந்து நிற்கும் உலகம்
இதனால் ரஷ்யா மற்றும் உக்ரைன் சார்பில் கூடுதல் படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு போர் உச்சகட்டத்தில் நடந்து வருகிறது. போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நடுவே குர்ஸ்க் பகுதியை முழுவதுமாக ரஷ்யா கைப்பற்றுமா? இல்லாவிட்டால் ரஷ்யா வீரர்களை விரட்டி உக்ரைன் தக்க வைத்து கொள்ளுமா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான ரிசல்ட்டை அறிய நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உண்மையில் 1.20 மீட்டர் விட்டம் கொண்ட கியாஸ் பைப் லைனில் ரஷ்ய வீரர்கள் ஒவ்வொரு குழுவாக 10 நாட்கள் ஊர்ந்து சென்று உக்ரைன் வீரர்களை தாக்கிய சம்பவம் என்பது மொத்த உலகத்தையும் அதிர வைத்துள்ளதோடு, ரஷ்யாவின் போர் யுக்தியை உலகுக்கு பறைசாற்றும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது என்கின்றனர் அரசியல் வல்லுனர்கள்.












Click it and Unblock the Notifications