இங்கிலாந்தில் பெண் எம்பி கத்தியால் குத்தி, துப்பாக்கியால் சுட்டுக் கொலை !
லண்டன்: இங்கிலாந்தில் பெண் எம்.பி., ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சியான லேபர் பார்ட்டியின் பேட்லி மற்றும் ஸ்பென் ஆகிய பகுதிகளின் எம்.பி.,யாக ஜோ காக்ஸ் (41) என்ற பெண்மணி உள்ளார். இவர், தனது தொகுதிக்கு உள்பட்ட பிர்ஸ்டால் என்ற இடத்தில் நடந்துசென்ற கொண்டிருந்தார்.

அப்போது, எதிரே வந்த மர்ம நபர் ஜோ காக்ஸ் மீது 3 முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். மேலும் கத்தியாலும் குத்தியுள்ளார். இதில் மயங்கி விழுந்த ஜோ காக்ஸ் படுகாயம் அடைந்தார். இதேபோன்று, ஜோ காக்ஸ் உடன் சென்ற நபரும் தாக்குதலுக்கு ஆளானார்.
இதையடுத்து, விரைந்து வந்த போலீசார், ஜோ காக்ஸை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதிகளவு ரத்தம் வெளியேறியதால், அவர் ஆபத்தான நிலைமையில் உயிருக்குப் போராடி வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.
ஜோ காக்ஸ் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய 52 வயதான அந்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அரசியல் காரணங்களுக்காக இந்த கொலை நடந்துள்ளதா என்ற கோணத்தில் பிரிட்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது பற்றி பொது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில், ஜோ காக்ஸ் ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர வேண்டும் என வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications