லூனா 25 விண்கலம்: விண்ணில் ஏவியது ரஷ்யா.. சந்திரயான் 3-க்கு முன்பே நிலவில் கால் பதிக்கிறதா?
மாஸ்கோ: 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவு குறித்த ஆராய்ச்சியில் ரஷ்யா மீண்டும் களம் இறங்கியுள்ளது. நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்யும் வகையில், ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் இன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு செல்லும்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ரூ.615 கோடியில் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் - 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக சந்திரயான் -3 விண்கலம் கடந்து கொண்டு இருக்கிறது. தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 3, வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்க உள்ளது. இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்தது இல்லை.
இந்த நிலையில் தான், ரஷ்யாவும் நிலவை ஆய்வு செய்ய லூனா -25 என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்த நிலையில், இன்று லுனா விண்கலத்தை ரஷ்யா விண்ணில் ஏவியது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.10 மணியளவில் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா, நிலவில் மீண்டும் ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை ஏவியுள்ளது.
இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை ஐந்தே நாளில் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு 4 முதல் ஐந்து நாட்கள் நிலவின் பாதையில் சுற்றும் இந்த விண்கலம் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான சரியான இடத்தை ஆய்வு செய்து அதன்பிறகு தரையிறங்க உள்ளது. இது தொடர்பாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் அதிகாரி அலெக்ஸாண்டர் பிளோகின் கூறியதாவது:-
"வரலாற்றில் முதல் முறையாக நிலவின் தென் துருவத்தில் விண்கலம் தரையிறங்க உள்ளது. தற்போது வரை நிலவின் equatorial zone பகுதியில் தான் விண்கலம் தரையிறக்கப்பட்டுள்ளது" என்றார். நிலவின் ஒரு ஆண்டு காலம் ஆய்வு செய்யும் வகையில் லுனா 25 விண்கலம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் நிலவின் தென் துருவத்தில் உள்ள மண் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய இருப்பதாகவும் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த விண்கலம் வரும் 21 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க கூடும் என்று எதிர்பார்ப்பதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு அமைப்பான Roscosmos தெரிவித்துள்ளது. இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் 23 ஆம் தேதி தரையிறங்க திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக இரண்டு நாட்களுக்கு முன்பே தரையிறங்க வகைக்கும் வகையில் ரஷ்யா வடிவமைத்துள்ளதாக தெரிகிறது. ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் 1,800 கிலோ எடை கொண்டது ஆகும். நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்கள், எரிபொருள், ஆக்சிஜன், குடிநீர் போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளது.












Click it and Unblock the Notifications