பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு! அப்படியே புதைந்த ஆயிரக்கணக்கான வீடுகள்! 300க்கும் அதிகமானோர் பலி
போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 1,100 பேருக்கும் அதிகமான வீடுகள் நிலத்தில் புதைந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.
பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பியிலிருந்து சுமார் 660 கி.மீ தொலைவில் உள்ள காகலம் கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல 1182 வீடுகள் மண்சரிவில் புதையுண்டுள்ளன.

மொத்தமாக 6க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், "மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் சாலைகளில் உள்ள தடைகள் அகற்றப்பட்டால்தான் மீட்பு பணிகள் முழு வீச்சில் தொடங்கும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பேரிடர் மீட்பு படையினரின் வருகை தாமதமாவதால், உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். எங்கு மக்கள் புதைந்திருக்கிறார்கள் என்று தெரியாமல் மக்கள் எல்லா இடங்களிலும் தொண்ட தொடங்கியுள்ளனர். கூடுதலாக மீட்பு படையினர் தேவைப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்களிலிருந்து வரும் ட்ரோன் காட்சிகள் நெஞ்சை பதற வைப்பதாக இருக்கிறது. பெண்கள் தங்கள் உறவினர்களை தேடி கதறி அழுதிருக்கிறார்கள்.
இது குறித்து பிரதமர் ஜேம்ஸ் மராப் கூறுகையில், "மீட்பு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறேன். உயிரிழப்புகள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அது கிடைக்கப்படும்போது பகிரப்படும். நிலச்சரிவில் தங்கள் சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
பக்கத்து நாடான ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், "பப்புவா நியூ கினியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார். இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்கிறோம். பக்கத்து நாடான ஆஸ்திரேலியா எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும்" என்று கூறியுள்ளார். நிலச்சரிவு குறித்த மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மீட்பு பணிகள் முழு வீச்சை எட்டும்போது உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications