ப்ளூஸ்டார் நினைவுநாள்: லண்டனில் சீக்கியர்கள் போராட்டம்... காந்தி சிலை உடைப்பால் பதட்டம்
லண்டன்: புளுஸ்டார் ஆபரேஷனின் 30ம் ஆண்டு நினைவுநாளையொட்டி லண்டனில் சீக்கியர்கள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில், மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப் பட்டதால் பதட்டம் உண்டாகியுள்ளது.
கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை அப்புறப்படுத்த இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் புளூஸ்டாரில் சீக்கியர்கள் பலர் பலியானார்கள். இதனை நினைவு கூறும்வகையில் ஆண்டுதோறும் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு அமிர்தசரஸ் பொற்கோவிலில் ‘ஆபரேஷன் புளூஸ்டாரின் 30-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது பொற்கோவில் வளாகத்தில் இரு பிரிவினருக்கு இடையே திடீர் மோதல் உண்டானது. இதில் சம்பவ இடத்தில் இருந்த 12 பேர் காயம் அடைந்தனர்.
இது ஒருபுறமிருக்க, நேற்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சீக்கியர்களால் புளூஸ்டார் ஆபரேஷனின் 30ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப் பட்டது.
லண்டனில் லெஸ்செல்டர் பகுதியில் உள்ள காந்திசிலை முன்பு குவிந்த அங்கு வாழும் சீக்கியர்கள், பொற்கோவிலில் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது, 1984-ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம். எங்களுக்கு நீதி வேண்டும் என்பன போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
அமைதியாக நடந்து கொண்டிருந்த போராட்டத்தில் திடீர் வன்முறை வெடித்தது. ஆவேசம் அடைந்த சிலர் அங்கிருந்த வெண்கலத்தினால் ஆன காந்தி சிலையை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது ஒரு கிரிமினல் வழக்காக கருதப்படும் என்றும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படியும் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு லெய்செல்டர் கிழக்கு எம்.பி. கெய்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்த இழிச்செயலை ஒருவரோ அல்லது பலர் சேர்ந்து கும்பலாக செய்திருந்தாலோ அது முட்டாள் தனமானது. மேலும் கீழ்த்தரமானது. மனிதாபிமானமற்ற செயல். ஏனெனில், காந்தி இந்தியாவுக்கு மட்டுமின்றி லெஸ்செல்டருக்கும் பாரம்பரிய சொத்து ஆவார்' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications