காதலுக்கு வயதில்லை...: 103 வயது தாத்தாவை மணந்த 99 வயது பாட்டி.. 80 வருடக் காதல் கதை
அசுங்லான்: கிட்டத்தட்ட 80 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து 35 கொள்ளுப் பேரன் பேத்திகளை எடுத்து விட்ட தாத்தா, பாட்டி சமீபத்தில் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
சாமி படத்தில் ஒரு பாடல் வருமே, ‘புள்ளக்குட்டி பெத்துக்கிட்டுக் கட்டிக்கலாமா...?' என்று அதனை தங்கள் வாழ்வில் நிரூபித்துக் காட்டியுள்ளனர் இந்த வயதான பராகுவே காதலர்கள்.
கல்யாணம் ஆகாமலேயே இத்தம்பதி கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காதல் கதை...
பராகுவே நாட்டை சேர்ந்த ஜோஸ்மனுவேர் (வயது 103). இவரது காதலி மார்ட்டினா லோபஸ் (99). 1933ம் ஆணு இவர்களுக்குள் காதல் பூ பூத்ததாம்.

35 கொள்ளு பேரப்பிள்ளைகள்....
ஆனால், திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் 80 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 8 குழந்தைகள், 50 பேரன் பேத்திகள், 35 கொள்ளுபேரன், பேத்திகள் உள்ளனர்.

கல்யாண ஆசை...
சமீபத்தில் இவர்களுக்கு முறைப்படி திருமணம் செய்து கொள்ளும் ஆசை வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

திருமண விழா...
திருமண விழாவில், அவரது குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்கள் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு திருமண விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

உற்சாக மனநிலை....
மணமகளான பாட்டி அழகிய கல்யாண உடை அணிந்திருக்க, தாத்தாவாகிவிட்ட மணமகன் வீல் சேரில் அமர்ந்து திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து மணமகள் மார்ட்டினா லோபஸ் கூறும்போது, ‘இவ்வளவு காலம் நாங்கள் சேர்ந்து வாழ்ந்தாலும், இப்போது திருமணம் செய்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான் மிகவும் உற்சாகமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் இருக்கிறேன்' என்றார்.












Click it and Unblock the Notifications