2 இந்திய போர் விமானங்களை சுட்டுவிட்டோம்.. விமானியை கைது செய்துள்ளோம்.. பாக். பரபரப்பு!
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இரண்டு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி இருக்கிறோம் என்று பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஏ.காஃபூர் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இரண்டு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி இருக்கிறோம் என்று பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஏ.காஃபூர் தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகாரப்பூர்வ போர் அறிவிப்பு மட்டுமே இன்னும் வெளியாகவில்லை. அதை தவிர ஒரு போருக்கு உண்டான எல்லா விஷயங்களும் தற்போது எல்லையில் நடந்து கொண்டு இருக்கிறது.
நேற்று பாகிஸ்தான் எல்லையில் சென்று இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதை தொடர்ந்து இன்று அதிகாலை இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது.
இந்தியாவில் தாக்குதல்
இந்த நிலையில் இன்று காலை இந்தியா உள்ளே புகுந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வருகிறது. இதையடுத்து தற்போது பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஏ.காஃபூர் புதிய பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்று அவர் கூறியுள்ளார்.
என்ன பேட்டி
அவர் தனது பேட்டியில், இன்று காலை இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்தது. இதையடுத்து அந்த போர் விமானங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்கு அருகில்தான் இந்த தாக்குதல் நடந்தது.
இரண்டு விமானம்
இதில் நாங்கள் இரண்டு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம். இன்று காலைதான் இந்த 2 இந்திய விமானங்களை வீழ்த்தினோம். ஒரு விமானம் அதில் இந்திய எல்லையில் விழுந்தது. இன்னொரு விமானம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் விழுந்தது என்று அவர் கூறியுள்ளார்.
பெரிய குழப்பம்
அதோடு ஒரு இந்திய போர் விமானத்தின் விமானியை கைது செய்து இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். இன்று காலை இந்திய போர் விமானம் மிக் -21 வெடித்து சிதறியதாக செய்தி வந்தது. அது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட விபத்தா, இல்லை இந்த விமானம்தான் தாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.