மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத்தை தரதரவென இழுத்துச் சென்ற போலீஸார்!
மாலே: மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத்தை கோர்ட் வளாகத்திற்குள் போலீஸார் தரையோடு தரையாக தரதரவென இழுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் செய்தியாளர்களிடம் பேச முயன்றபோது அதைத் தடுத்த போலீஸார் வலுக்கட்டாயமாக இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.
மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். 2012ம் ஆண்டு அதிபராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி நீதிபதி அப்துல்லா முக்மதுவை கைது செய்ய ராணுவத்தைப் பயன்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் நஷீத் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார் நஷீத்.

இந்த வழக்கில் நேற்று நஷீத்தை ஆஜர்படுத்த கோர்ட்டுக்குக் கொண்டு வந்தனர் போலீஸார். அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேச முயன்றார் நஷீத். ஆனால் அதைப் போலீஸார் தடுத்தனர். இதையடுத்து கீழே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் நஷீத். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், அதிரடியாக நஷீத்தை தரதரவென தரையோடு தரையாக இழுத்துச் சென்றனர் போலீஸார்.

நீதிபதி முகம்மதுவை கைது செய்ய நஷீத் 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார். இதையடுத்து மாலத்தீவில் மக்கள் புரட்சி வெடித்தது. போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து பதவியிலிருந்து விலகினார் நஷீத்.
30 ஆண்டு காலம் மாலத்தீவை தனது பிடியில் வைத்திருந்த மாமூன் அப்துல் கயூமை தோற்கடித்த முதல் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக பதவிக்கு வந்தவர் நஷீத் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியிலிருந்து விலகிய பின்னர் 2013ல் நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட நஷீத், கயூமின் ஒன்று விட்ட சகோதரரான யாமீனிடம் தோல்வியுற்றார்.
தற்போது நஷீத்துக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் தனது வக்கீல் யார் என்பதைச் சொல்ல வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications