எம்.ஹெச். 17: பலியானவர்களின் உடல்கள் விமானம் மூலம் அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைப்பு
கீவ்: ஏவுகணை வீசித் தாக்கப்பட்ட மலேசிய விமானத்தில் இருந்தவர்களின் உடல்கள் உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கார்கிவ் நகரை அடைந்தது. இதையடுத்து உடல்கள் சிறப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே ஏவுகணை வீசித் தாக்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு புரட்சிப்படை பிடியில் இருக்கும் டோனட்ஸ்கில் விழுந்தது. புரட்சிப்படையினர் உடல்களை ரயிலில் ஏற்றி டோரஸ் என்ற இடத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து புரட்சிப்படையினர் உடல்களை தங்களிடம் ஒப்படைப்பார்கள் என்று உக்ரைன் அரசு எதிர்பார்த்தது.
ரயில்
மலேசிய விமானத்தில் சென்று பலியானவர்களில் 282 பேரின் உடல்கள் குளிரூட்டப்பட்ட ரயில் மூலம் நெதர்லாந்து மற்றும் மலேசியா பிரதிநிதிகளுடன் டோரஸில் இருந்து கிளம்பியது.
கார்கிவ்
டோரஸில் இருந்து கிளம்பிய ரயில் டோனட்ஸ்க் ரயில் நிலையத்தில் பல மணிநேரம் நின்றது. அதன் பிறகு அங்கிருந்து கிளம்பிய ரயில் செவ்வாய்க்கிழமை உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கார்கிவ்-பாலாஷோவ்ஸ்கி ரயில் நிலையத்தை அடைந்தது.
சிறப்பு பெட்டிகள்
ரயிலில் வந்த உடல்கள் ஒரு பேக்டரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு பெட்டிகளில் போடப்பட்டு அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆதாரங்கள்
புரட்சிப்படையினர் விமானம் விழுந்த இடத்தில் இருந்த ஆதாரங்களை அழித்துவிட்டதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
சண்டை
செவ்வாய்க்கிழமை உக்ரைன் படைக்கும், புரட்சிப்படைக்கும் இடையே சண்டை நடந்தது. புரட்சிப்படையினர் ஒரு பேருந்தில் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் உக்ரைன் ராணுவத்தைச் சேர்ந்த 13 பேர் பலியாகினர். மேலும் புரட்சிப்படையினர் தங்கள் பிடியில் உள்ள லுஹான்ஸ்க் நகரில் நடத்திய தாக்குதலில் 5 பொது மக்கள் பலியாகினர், 16 பேர் காயம் அடைந்தனர்.