7 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்: குத்து சண்டை வீரர் மைக் டைசன்
நியூயார்க்: உலக பிரபலமான குத்து சண்டை வீரர் மைக் டைசன் சிறு வயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட தகவல் இப்போது அவரது வாயாலே வெளியே வந்துள்ளது.
மைக் டைசன் பெயரை கேட்டாலே குத்து சண்டை வீரர்களுக்கு வயிற்றை கலக்கும் நிலை ஒரு காலத்தில் இருந்தது. அப்படிப்பட்ட வீரர் சிறு வயதில் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டவராகும்.
இந்நிலையில் அமெரிக்க ரேடியோ ஒன்றுக்கு பேட்டியளித்த மைக் டைசன் சிறு வயதில் தனக்கு வயதான ஆண் ஒருவரால் நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து இப்படி குறிப்பிட்டுள்ளார். "அப்போது எனக்கு 7 வயதிருக்கும். நான் நியூயார்க் நகர தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். வயதான ஆண் ஒருவர் திடீரென என்னை இழுத்துச் சென்று பாலியல் புணர்ச்சிக்கு ஆளாக்கினார். இதனால் நான் அதிர்ச்சியடைந்தேன். இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த நபரை நான் வாழ்க்கையில் பார்த்தது இல்லை.
இந்த சம்பவம் குறித்து நான் போலீசில் புகார் அளிக்கவில்லை. எனவே இத்தனை காலமாக அது மறைக்கப்பட்ட உண்மையாகவே இருந்தது. நான் அந்த சம்பவத்தை மறந்துவிட்டு எனக்கான வாழ்க்கையை வாழத்தொடங்கினேன். அந்த சம்பவம் எனது வாழ்க்கையை மாற்றிப்போட்டதா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை" இவ்வாறு மைக் டைசன் கூறியுள்ளார்.