சிங்கப்பூரில் இஃப்தார் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் நன்கொடை
சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), ஞாயிற்றுக்கிழமை 26-05-2019 அன்று, நோன்பு திறப்பு மற்றும் இன நல்லிணக்க நிகழ்ச்சியை சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசலின் பன்னோக்கு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடத்தியது.
சிங்கப்பூர் அரசின் வர்த்தக தொழில் அமைச்சர், திரு சான் சுன் சிங் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவரது சிறப்புரையில், "சிங்கப்பூரில் சமய இன நல்லிணக்கம் தொடர்ந்து மேம்படுவதும், நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற நன்னெறிகளை நாம் தொடர்ந்து பின்பற்றி நடப்பதும் மிகவும் அவசியம்" என்றும் குறிப்பிட்டார்.

கல்வி சார்ந்த சமூக நலப்பணிகளை கடந்த 9 ஆண்டுகளாக சிங்கப்பூரில் ஆற்றி வரும் இச்சங்கம், நாம் புரிந்துணர்வோடு ஒன்றுபட்ட சமூகமாக தொடர்ந்து திகழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக சங்கத்தின் தலைவர், பட்டயக் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர் அவரது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
சிண்டா பரிந்துரை செய்த தொடக்க நிலை பயிலும் 10 மாணவர்களுக்கு, எழுது பொருட்களும், பற்றுச் சீட்டும் நன்கொடையாக இச்சங்கம் வழங்கியது. சிண்டாவின் தலைமை அதிகாரி திரு ரா. அன்பரசு, சிண்டாவும் இச்சங்கமும் இணைந்து ஆற்றி வரும் பணிகளைப் பற்றி எடுத்துரைத்தார்.

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) ஆற்றி வரும் சமூகப் பணிகளை, அமைச்சர் திரு சான் சுன் சிங் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பாராட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பென்கூலன் பள்ளிவாசலின் உஸ்தாத் மௌலவி கலீல் அஹமது ஹசனி, நோன்பின் மாண்புகளைப் பற்றி தனது உரையில் எடுத்துரைத்தார். பல்வேறு அமைப்புகளின் சமூகத் தலைவர்களும், பல இன மக்களும், மாணவர்களும், சங்கத்தின் உறுப்பினர்களும் உட்பட சுமார் 250 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துச் சிறப்பித்தனர். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. ஹபீபுல்லாஹ் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.













Click it and Unblock the Notifications