கடத்தப்பட்ட 10 வயது சிறுமி.. காட்டிக் கொடுத்த பேஸ்புக் லைவ்.. தட்டித் தூக்கிய போலீஸ்
லூசியானா: அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கடத்தப்பட்ட 10 வயது இளம் பெண்ணை இருவர் மீட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
லூசியானாவில் கடந்த ஞாயிறு அன்று ஜலிஸா லஸேல் எனும் சிறுமி காணாமல் போனார். Amber Alert எனும் 'குழந்தை கடத்தல் அவசர எச்சரிக்கை' குழு ஜலிஸா காணாமல் போனது குறித்து அப்பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்திருந்தது.
மேலும், நிசான் அல்டிமான 2012 சில்வர் நிற காரில் அவர் காணாமல் போயிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
மெரிக் மற்றும் ஆன்டொனி
இந்த செய்தியை டியன் மெரிக் மற்றும் பிராண்டன் ஆன்டொனி ஆகியோரும் அறிந்திருந்தனர். இந்நிலையில், Burton Plantation நெடுஞ்சாலையில் இருவரும் சென்றுக் கொண்டிருந்த போது, அங்கு ஒரு மறைவில் சில்வர் நிற கார் நின்றுக் கொண்டிருந்ததை கவனித்தனர்.
அணைக் கட்டி தடுப்பு
உடனே 911க்கு தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறி, தங்களது குப்பை லாரி மூலம் கார் வெளியே செல்ல முடியாமல் அணை கட்டி தடுத்து நிறுத்தினர். ஒரு நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, காருக்குள் இருந்து சிறுமி ஜலிஸாவை பத்திரமாக மீட்டனர். இவை அனைத்தையும் டியன் மெரிக் பேஸ்புக்கில் லைவ் செய்தார்.
ஆனந்தக் கண்ணீர்
சிறுமியை கடத்திய 33வயதான மைக்கேல் செரியல் என்பவரும் கைது செய்யப்பட்டார். தான் காப்பாற்றப்பட்ட போது சிறுமி ஜலிஸா ஆனந்த மிகுதியில் அழுதார் என்று ஆன்டொனி கூறினார்.
கருணை கிடையாது
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த பாலியல் குற்றவாளிக்கு லூசியானா சட்டத்தின் கீழ் பரோல், தண்டனை குறைப்பு போன்ற எந்த கருணையுமின்றி ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
கண்கலங்க வைத்தார்
குற்றவாளியை பிடிக்க உதவி புரிந்தது மட்டுமில்லாமல், காவல் நிலையத்தில் அனைத்து நடைமுறைகளையும் முடித்து, சாட்சியம் அளித்த பின்னர் இறுதியாக, 'அந்தப் பெண்ணுக்கு பசிக்கிறது என்றால், அவளுக்கு ஏதாவது உணவு வாங்கி வருகிறேன்' என்று கூறி அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார் டியன் மெரிக்.