மாயமான விமானத்தை வெளியில் இருந்து கட்டுப்படுத்த முடியாது
கோலாலம்பூர்: மாயமான விமானத்தை வெளியில் இருந்து யாரும் கட்டுபடுத்துவது கடினம் என்று மலேசியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஏவியேஷன் டெக்னாலஜியில் பணிபுரியும் துணை பேராசிரியர் அபு ஹனிபா அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மாயமான மலேசிய விமானம் கீழே விழவும் இல்லை, வெடித்துச் சிதறவும் இல்லை என்று ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இரண்டு பொருட்கள் கிடக்கின்றன என்றும், அவை மாயமான விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என்றும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
முன்னதாக விமானத்தின் கம்ப்யூட்டரை வெளியில் இருந்து யாரோ ஹேக் செய்து அதன் பாதையை மாற்றியதாக கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கோலாலம்பூர் பல்கலைக்கழகத்தின் மலேசியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஏவியேஷன் டெக்னாலஜியில் பணிபுரியும் துணை பேராசிரியர் அபு ஹனிபா அப்துல்லா கூறுகையில்,
கட்டுப்பாட்டு அறை
கமர்ஷியல் விமானங்கள் பொதுவாக விமானிகளின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். பாதையை மாற்ற வேண்டும் என்று விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்தால் தான் பாதை மாற்றம் செய்யப்படும்.
மோசமான வானிலை
மோசமான வானிலை இருந்தாலோ அல்லது பறக்கக்கூடாத பகுதியை விமானம் நெருங்கினாலோ அதன் பாதை மாற்றப்படும். பிரச்சனைகளை தவிர்க்க விமானி பாதையை மாற்றுவார்.
ஆய்வு
விமானம் பறக்கும் முன்பு அதை என்ஜினியர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்வார்கள். அவர்கள் விமானம் நல்ல நிலையில் உள்ளது என்று தெரிவித்த பிறகே விமானம் கிளம்பும்.
கட்டுப்பாடு
விமானத்தின் கம்ப்யூட்டரை வெளியில் உள்ள யாரோ ஹேக் செய்து விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பது சாத்தியம் இல்லை என்று ஹனிபா தெரிவித்துள்ளார்.