இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள்?... நாசாவைச் சாடும் யு.எப்.ஓ. ஆராய்ச்சியாளர்
வாஷிங்டன்: பூமிக்கு மேலே ஒளிரும் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று தோன்றியதை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த கேமரா பதிவு செய்துள்ளது. ஆனால், அக்காட்சிகளை நாசா எடிட் செய்து விட்டதாக வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி செய்பவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விண்வெளி மற்றும் வேற்றுக்கிரகவாசிகள் குறித்த ஆய்வு சர்வதேச அளவில் நடந்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் பிற செயற்கைக்கோள்களில் இருந்து பூமி மற்றும் பிற கிரகங்களின் தோற்றம் படங்களாக எடுத்து அனுப்பப்பட்டு வருகிறது. அவற்றை எடிட் செய்து நாசா வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில் செயற்கைக்கோள்கள் அனுப்பிய புகைப்படங்களில் செவ்வாயில் நண்டு, பெண் உருவம், பறக்கும் தட்டு போன்றவைக் காணப்பட்டதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாயின. ஆனால், அது குறித்து நாசா வாய் திறக்கவில்லை.
வினோத ஒளி...
இந்நிலையில், பூமியின் மீது வினோதமான ஒளி ஒன்று பீய்ச்சி அடிப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அது சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும், ஆனால் அவற்றை எடிட் செய்து நாசா வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பறக்கும் தட்டு...
ஆனால் அது வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டில் இருந்து பீய்ச்சப்படும் ஒளி என்றும், நாசா பூமியில் உள்ள மக்களிடம் வேற்றுக்கிரகவாசிகள் குறித்த தகவல்களை மறைப்பதாகவும் யு.எப்.ஓ. ஆர்வலர் ஸ்காட் வாரிங் கூறுகிறார்.
நாசா ஏமாற்றுகிறது...
மேலும் அவர் கூறுகையில், ‘இன்னும் எத்தனை காலம்தான் நாசா மக்களை ஏமாற்றப் போகிறது என்று தெரியவில்லை. இந்த வீடியோவை எடிட் செய்தே நாசா வெளியிட்டுள்ளது. பல ரகசியங்களை அது மக்களிடமிருந்து மறைத்து வருகிறது.
வேற்றுகிரக விண்கலம் தான்...
விண்வெளியில் உள்ள ஒரு விண்கலத்திலிருந்து வந்த ஒளிதான் இது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த விண்கலம் என்ன என்பதைக் காட்டாமல் எடிட் செய்துள்ளது நாசா. அது நிச்சயம் ஒரு வேற்று கிரக விண்கலம்தான். சந்தேகமே இல்லை என்றார் அவர்.