ரஷ்யாவுக்கு செக்.. உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளி கொடுக்கும் நேட்டோ நாடுகள்! தீவிரமடைகிறது போர்
கீவ்: கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் - ரஷ்யா போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு நேட்டோ புதிய ஆயுதங்களை வழங்கியுள்ளது. போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என உலக நாடுகள் குரல் கொடுத்து வரும் நிலையில், இந்த ஆயுத சப்ளை விவாதங்களை கிளப்பியுள்ளது.
சோவியத் ரஷ்யா இருந்த காலத்தில் அதற்கு எதிராக உருவாக்கப்பட்டதுதான் நேட்டோ. ரஷ்யாவுடன் அப்போது பல நாடுகள் இணைந்திருந்தன. எனவே, இதனை தடுக்கும் நோக்கிலும், தங்களுக்கு என புதிய ராணுவ கூட்டாளிகளை உருவாக்கும் நோக்கிலும் அமெரிக்கா நேட்டோவை உருவாக்கியது. ஆனால், சோவியத் வீழ்ந்து ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னமும் நேட்டோ கலைக்கப்படவில்லை. அதேபோல முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோ தன்னுள் இழுத்து வருகிறது.

இது ரஷ்யாவுக்கு பெரும் தலைவலியை உருவாக்கிவிட்டது. அமெரிக்காவின் நேட்டோ படைகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, உக்ரைன் பக்கம் வந்துவிட்டது. உக்ரைன் ரஷ்யாவின் அண்டை நாடு. இந்த நாட்டை நேட்டோவில் இணைத்துவிட்டால் அந்நாட்டின் எல்லையில் அமெரிக்கா படைகளை நிறுத்திக்கொள்ளலாம். இது ரஷ்யாவின் இறையாண்மைக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிடும். எனவே இது குறித்து ஏற்கெனவே புதின் எச்சரித்திருந்தார்.
இந்த எச்சரிக்கையை மீறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நேட்டோவில் இணைய ஒப்புக்கொண்டார். இந்த புள்ளிதான் ரஷ்யா-உக்ரைன் போருக்கான தொடக்கம். 2022ல் தொடங்கிய போர் அடுத்த 6 மாதங்களில் முடிவடைந்து விடும் என்று ரஷ்யா நம்பியது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து உக்ரைனுக்கு ஏராளமான ஆயுத உதவிகளை செய்தது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போர் நீடித்து வருகிறது.
அதேபோல ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுத உதவி செய்வதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளது. ஆனால், இதனை இரண்டு நாடுகளும் மறுத்திருக்கின்றன. இருப்பினும் கடந்த 19ம் தேதி வடகொரியாவுக்கும், 20ம் தேதி வியட்நாமுக்கும் ரஷ்ய அதிபர் புதின் சென்றிருப்பது சர்வதேச நாடுகள் மத்தியில் சலசலப்புகளை கிளப்பியிருந்தது.
சூழல் இப்படி இருக்கையில், தற்போது உக்ரைனுக்கு அதிநவீன பாதுகாப்பு ஆயுதங்களை நேட்டோ நாடுகள் கொடுக்க முன்வந்திருக்கின்றன. உக்ரைனை பொறுத்தவரை, தன்னுடைய தலைநகர் மற்றும் முக்கிய பகுதிகளை காப்பாற்ற அது, ஏவுகணை தடுப்பு அமைப்பை பயன்படுத்தி வருகிறது. இருப்பினும், ரஷ்யா சூப்பர் சோனிக் ஏவுகணையை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த வகை ஏவுகணைகளின் தாக்குதலை தடுப்பது சற்று சிரமம்.
எனவே இது தொடர்பாக நேட்டோ நாடுகளிடம் உக்ரைன் உதவியை கோரியிருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது டென்மார்க், நெதர்லாந்து, ருமேனியா மற்றும் நார்வே உள்ளிட்ட நாடுகள் அதிநவீன வான் பாதுகாப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க முன்வந்துள்ளன.
பேட்ரியாட் எனப்படும் இந்த வான் பாதுகாப்பு ஆயுதம், சூப்பர் சோனிக் போன்ற சக்திவாய்ந்த ஏவுகணைகளை இடையில் வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன்கொண்டதாகும். முதல்கட்டமாக நெதர்லாந்து தனது சார்பில் ஆயுதங்களை உக்ரைனுக்கு கொடுத்திருக்கிறது. ஏற்கெனவே அமெரிக்கா மட்டும் தனிப்பட்ட முறையில் இதுவரை ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு மனிதாபிமான உதவியாகவும், ரூ.24 ஆயிரம் கோடி வளர்ச்சி நிதி என்கிற பெயரிலும், ரூ.1.9 லட்சம் கோடி நேரடி உதவியாகவும் உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications