வேலையே இல்லை.. நேபாளத்தையே நாறடித்த அழுகி போன அரசியல்.. எச்சரிக்கையை புறக்கணித்த ஒலி
காத்மாண்டு: உலக வங்கியின்படி, 2025 நிதியாண்டின் முதல் பாதியில் நேபாளத்தின் பொருளாதாரம் 4.9% வளர்ந்து இருந்தது. ஆனால், வேலைவாய்ப்பு சுத்தமாக வளரவே இல்லை.. அந்த நாட்டில் 82 சதவீதம் மக்கள் முறை சாரா, உடல் உழைப்பு தொழில் மட்டுமே ஒரே வாய்ப்பு என்கிற நிலையில் இருந்தது. வேலையே இல்லை என்கிற நிலை வந்ததால் இளைஞர்கள் நீர் பூத்த நெருப்பாக இருந்தனர். ஆனால் மொத்தமாக அவர்கள் பொங்கி எழுந்ததால், இன்றைய, முன்னாள் என எல்லா பிரதமர்கள், அமைச்சர்களையும் ஓட விட்டு துரத்தி அடித்துள்ளார்கள் அந்நாட்டு மக்கள்.
நேபாளத்தின் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் நான்காவது முறையாகப் பதவியேற்றபோது, அவரது ஆட்சி ஸ்திரமாக இருந்தது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (யுஎம்எல்) தலைவராக மூன்றாவது முறை பதவியேற்கத் தயாராக இருந்த அவர், தனக்கு வந்த எதிர்ப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கியபடி இருந்தார். ஆனால், அண்மையில் பரவிய ஊழல் குற்றச்சாட்டுகள், அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்தியது, மற்றும் சமூக ஊடகத் தடை ஆகியவை அவரது பதவியையே பறித்துவிட்டது.

சமூக ஊடகத் தடையின் தாக்கம்
ஊழல் குறித்த செய்திகள் இணையத்தில் வேகமாகப் பரவியதால், கடந்த வாரம் நேபாளத்தின் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவை, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் உட்பட 26 சமூக ஊடக தளங்களை தடை செய்தது. இந்த நடவடிக்கை, சுற்றுலாத் துறையையும், வெளிநாடுகளில் வாழும் நேபாள மக்களையும் கடுமையாகப் பாதித்தது.
அதேநேரம் டிக்டாக், வைபர், நிம்பஸ், வெடாக், மற்றும் போப்போ லைவ் போன்ற சமூக வலைதளங்கள் தடையிலிருந்து தப்பின. முன்னதாக, 2023-ல் டிக்டாக் தடை செய்யப்பட்டு பின்னர் மீண்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட முக்கியமான ஏராளமான சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டதால் சுற்றுலா துறையை நம்பி வாழும் நேபாள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் திங்கட்கிழமை அன்று 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பலரும் நடத்திய போராட்டம் பெரிதாக வெடித்தது. அதன் விளைவாக பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.
இளைஞர்களின் எழுச்சி (GenZ)
"ஹமி நேபாளம்" என்ற குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த "GenZ போராட்டங்கள்" நேபாள அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் அரசியல் கட்சிகளோ அல்லது அவற்றின் இளைஞர் பிரிவுகளோ ஈடுபடவே கிடையாது. வேலைவாய்ப்பு இல்லாதது, சமூகத்தில் நிலவி வந்த அதிக ஏற்றத்தாழ்வு, ஊழல் மற்றும் கடந்த 2008-ல் நேபாளம் குடியரசானதிலிருந்து ஒரே தலைவர்கள் மாறி மாறி ஆட்சிக்கு வருவது என பல வருடங்களாக இருந்த கோபத்தின் வெளிப்பாடாக இந்த சமூக ஊடகத் தடையை இளைஞர்கள் பார்த்தார்கள். காத்மாண்டு மேயர் பாலேந்திரா ஷா மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி தலைவர் ரபி லாமிச்சானே போன்றோர் இந்த இளைஞர் போராட்டங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்கள்.
ஊழலும் சிக்கலாக்கியது
நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி , ஊழல் தடுப்பு அமைப்பான CIAA-ன் தலைவராக பிரேம் குமார் ராய் என்பவரை நியமித்தது சர்ச்சைக்குள்ளானது. இந்த பிரேம் குமார் ராய் மீது போலி பூட்டானிய அகதிகள் மோசடி மற்றும் நேபாள ஏர்லைன்ஸ் விமானம் வாங்கியது போன்ற இரண்டு பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால் பிரேம் குமார் ராய் தனது விசுவாசத்தால், CIAA-வை ஒலியின் அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தும் கருவியாக மாற்றியிருந்துள்ளாராம். இது மட்டுமல்ல மேலும் ஒன்பது புலனாய்வு அமைப்புகளையும் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கிறார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் என்னென்ன
இதனால் நேபாளத்தின் அரசியல் தலைவர்களிடையே ஊழல் ஒரு முடிவில்லாத சுழற்சியாக மாறி மாறி வந்த வண்ணம் இருந்ததாம். நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தது. அவர் மிது தேயிலைத் தோட்டத்தை வணிக நிலங்களாக மாற்றியதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதுபோல் முன்னாள் பிரதமர்களான மாதவ் நேபாளம், பாபுராம் பட்டாராய், மற்றும் கில் ராஜ் ரெக்மி ஆகியோர் அரசு நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. பிரச்சண்டா, மாவோயிஸ்ட் போராளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தன் வயப்படுத்தியதாக புகார்கள் உள்ளது. ஷெர் பகதூர் தேவுபா, விமானக் கொள்முதல் மோசடியிலும், அவரது மனைவி அர்சு ராணா தேவுபா, அகதிகள் மோசடியிலும் சிக்கியிருக்கிறார்கள். ஆனால் பல ஆண்டுகளாக, அமைச்சரவை முடிவுகளுக்கு "பாதுகாப்பு" என்ற சட்டப்பூர்வ தடையை உருவாக்கி, அரசியல்வாதிகள் தங்களை ஊழல் விசாரணைகளிலிருந்து தற்காத்துக் கொண்டு வந்தார்களாம்.
வேலையின்மை காரணம்
வேலையின்மையும் புரட்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உலக வங்கியின்படி, 2025 நிதியாண்டின் முதல் பாதியில் நேபாளத்தின் பொருளாதாரம் 4.9% வளர்ந்துள்ளது. ஆனால், வேலைவாய்ப்பு மிக குறைவாகவே இருந்தது. அந்தத நாட்டில் 82% தொழிலாளர்கள் முறைசாரா வேலைகளை செய்துள்ளார்கள். அதாவது உடல் உழைப்பு தொழில் தான். அந்த வேலையும் தினசரி கிடைக்குமா என்றால், அதுவும் கேள்விக்குறி தான். மேலும், சுற்றுலாவை நம்பியுள்ள நேபாளம் காலநிலை மாற்றங்களால் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது, அதுவும் ஏற்றத்தாழ்வை அதிகரித்தது. இதனால், பல இளைஞர்கள் அரசியலில் நம்பிக்கை இழந்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அதே நேரத்தில், நேபாளத்தில் தங்கியிருக்கும் இளைஞர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த வீதிகளில் இறங்கியிருக்கிறார்கள். இந்த முறை, அவர்களின் ஒன்றுபட்ட போராட்டம் நேபாள பிரதமர் ஒலியைப் பதவியிலிருந்து நீக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications