டோக்கியோ கோவிலில் உள்ள நேதாஜியின் அஸ்திக் கலசத்தில் அவரது தங்கப் பல்?
லண்டன்: டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோவிலில் வைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியில் அவரது தங்கப் பல்லும் மறைந்திருப்பதாக இங்கிலாந்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரெங்கோஜி கோவிலில்தான் நேதாஜியின் அஸ்தி பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அத்தோடு அவரது தங்க முலாம் பூசப்பட்ட பல்லும் கூட பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த இணையதளம் கூறியுள்ளது.
நேதாஜியின் நெருங்கிய தளபதியான கர்னல் ஹபிபூர் ரஹ்மான் (இவரும் 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 18ம் தேதி தைவானில் நடந்ததாக கூறப்படும் விமான விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்) தனது மறைவுக்கு முன்பாக தனது மகனிடம் இந்த தங்கப் பல் குறித்துக் கூறியுள்ளாராம்.

அஸ்தியில் பல்லைப் போட்டேன்
ஹபிபூர் ரஹ்மான் தனது மகனிடம் கூறுகையில், விமான விபத்தில் உயிரிழந்த நேதாஜியின் உடலை தகனம் செய்த பின்னர், அவரது அஸ்தியில், அவரது தங்கப் பல்லையும் போட்டு விட்டதாக கூறியுள்ளாராம்.

தகனத்திற்கு முன்பு
முன்னதாக தகனத்திற்கு முன்பு நேதாஜியின் தங்கப் பல்லை மட்டும் தனியாக எடுத்து அதை அவரது நெருங்கிய சகாக்களிடம் கொடுத்ததாக www.bosefiles.info என்ற இந்த இங்கிலாந்து இணையதளம் தெரிவித்துள்ளது.

ஆசிஷ் ராய்
இந்ச இணையதளத்தை உருவாக்கியவர் பெயர் ஆசிஷ் ராய். இவர் ஏற்கனவே இதுகுறித்து முன்னாள் பிரதமர்கள் பி.வி. நரசிம்ம ராவ், வாஜ்பாய் மற்றும் முன்னாள் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு உள்ளிட்ட தலைவர்களிடமும் தெரிவித்துள்ளார். இதை சமீபத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட ரகசிய ஆவணமும் உறுதிப்படுத்துகிறது.

1978ல் மறைந்த ரஹ்மான்
இந்தத் தகவலை முதலில் வெளியிட்டவரான ஹபிபூர் ரஹ்மான் கடந்த 1978ம் ஆண்டு மரணமடைந்தார். மறைவுக்கு முன்பாக நேதாஜி குறித்த பல தகவல்களை அவர் தனது மகன் நயீமுர் ரஹ்மானிடம் தெரிவித்துள்ளார் அவர்.

ரஹ்மான் டூ ராய்
ரஹ்மான் தனது தந்தை தெரிவித்த தகவல்களை ஆசிஷ் ராயிடமும் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் தன்னைச் சந்தித்த ராயிடமும் இத்தகவல்களைத் தெரிவித்துள்ளார் ரஹ்மான். 90களில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. நேதாஜி குறித்த விசாரணையில் அப்போது ராய் ஈடுபட்டிருந்தார்.

1995ல் அரசுக்குத் தெரிவித்தார்
இந்தத் தகவல்களைச் சேகரித்த பின்னரே 1995ம் ஆண்டு அவர் ராவ், வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களிடம் இதைத் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 11ம் தேதி இதுகுறித்த விவரத்தை மேற்கண்ட தலைவர்களுக்கு அவர் கடிதம் மூலமாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்கேன் செய்தால் தெரிந்து விடும்
நயீமுர் ரஹ்மான் சொன்ன தகவல் உண்மையா என்பதை மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்றும் ராய் கூறியுள்ளார். சாதாரணமான ஸ்கேனை செய்து பார்த்தாலே அது தெரிந்தவ விடும். மேலும் டிஎன்ஏ சோதனையும் செய்யலாம் என்றும் ராய் கூறியுள்ளார்.

வருத்தப்பட்ட ரஹ்மான்
மேலும் ஹபிபூர் ரஹ்மான் தனது மறைவுக்கு முன்பு தனது மகனிடம் நேதாஜி மரணத் தகவல்களை இந்திய மக்கள் நம்பாதது குறித்தும் வேதனைப்பட்டாராம். அவரது அஸ்தியை தான்தான் தைவானிலிருந்து டோக்கியோவுக்கு தான் எடுத்துச் சென்றதையும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா வர மறுத்தார்
மேலும் தான் சொல்வதை இந்திய மக்கள் நம்ப மறுத்த வேதனையில்தான் இதுகுறித்து 70களில் அமைக்கப்பட்ட ஜி.டி கோஸ்லா கமிஷன் விசாரணைக்காக வர மறுத்து இஸ்லாமாபாத்திலேயே அவர் தங்கி விட்டதாகவும் கூறியுள்ளார் நயூமுர் ரஹ்மான்.












Click it and Unblock the Notifications