21 குர்திஷ் படை வீரர்களை கூண்டில் அடைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற ஐ.எஸ்.ஐ.எஸ்.
பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாங்கள் பிடித்த 21 குர்திஷ் படை வீரர்களை கூண்டில் அடைத்து அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து குர்திஷ் பெஷ்மெர்கா படை வீரர்கள் போராடி வருகிறார்கள். அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள நகரங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தீவிரவாதிகள் குர்திஷ் படை வீரர்கள் 21 பேரை பிணையக் கைதிகளாக பிடித்தனர். அவர்களுக்கு ஆரஞ்சு நிற உடை அளித்து அவர்களை கூண்டுகளில் அடைத்து வாகனங்களில் ஏற்றி தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் ஈராக் ராணுவ அதிகாரி என்று கூறப்படுகிறது.
கூண்டுகளில் இருந்தவர்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால் வீடியோவில் உள்ள ஒருவர் குர்திஷ் படை வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உங்கள் வேலையை விட்டுவிட்டு செல்லுங்கள். அல்லது உங்களுக்கும் இதே நிலை தான். கூண்டிலோ அல்லது நிலத்திற்கு அடியிலோ என்று குர்திஷ் மொழியில் எச்சரித்துள்ளார்.
குர்திஷ் பெஷ்மெர்கா படையினர் வடக்கு ஈராக்கில் உள்ள குர்திஸ்தானை பாதுகாத்து வருகிறார்கள். முன்னதாக அவர்கள் சதாம் ஹுசைனின் ஆட்சியை எதிர்த்து போராடினார்கள். மேலும் அமெரிக்க படையுடன் சேர்ந்து பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.