அமெரிக்கா: 9 மாத தம்பியை தலையில் சுட்டுக் கொன்ற 5 வயது சிறுவன்
மிசோரி: அமெரிக்காவில் 5 வயது சிறுவன் தனது தாத்தாவின் துப்பாக்கியை வைத்து விளையாடுகையில் குண்டுவெடித்து அவரின் தம்பியான 9 மாத குழந்தை பலியானது.
அமெரிக்காவில் உள்ள மிசௌரி மாநிலத்தில் இருக்கும் நோடவே கவுன்ட்டியைச் சேர்ந்த பெண் அலெக்சிஸ் வீடெர்ஹோல்ட். அவர் தனது 5 வயது மகன் மற்றும் 9 மாத ஆண் குழந்தையான கார்பினுடன் தனது தந்தையின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கார்பினை படுக்கை அறையில் தூங்க வைத்துவிட்டு வேறு அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது படுக்கையறையில் இருந்த அலெக்சிஸின் தந்தையின் துப்பாக்கியை எடுத்து அந்த 5 வயது சிறுவன் விளையாடியுள்ளார். விளையாடியபோது அவர் கை தவறி சுட்டதில் கார்பினின் தலையில் குண்டு பாய்ந்தது. துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டு ஓடி வந்த அலெக்சிஸிடம் அம்மா, மன்னித்துவிடுங்கள் நான் கார்பினை சுட்டுவிட்டேன் என்று சிறுவன் தெரிவித்துள்ளார்.
அலெக்சிஸ் உடனே குழந்தை கார்பினை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் குழந்தை சிகிச்சை பலனின்றி பலியானது.
குழந்தைகள் இருக்கும் வீட்டில் எதற்காக என் தந்தை துப்பாக்கியில் குண்டுகளை போட்டிருந்தார் என தெரியவில்லை என்று அலெக்சிஸ் தெரிவித்தார்.
இது குறித்து அலெக்சிஸின் தந்தை கூறுகையில்,
பாதுகாப்புக்காகவும், துப்பாக்கிச்சுடும் பயிற்சிக்காவும் நான் துப்பாக்கியில் குண்டுகள் நிரப்பி அதை ஒரு டப்பாவில் போட்டு பூட்டி வைத்திருந்தேன். அந்த டப்பாவை சாவி அல்லது ஸ்க்ரூடிரைவரால் மட்டுமே திறக்க முடியும் என்றார்.
அமெரிக்காவில் சிறுவர்கள் துப்பாக்கியால் தங்களின் உடன் பிறப்புகளை தெரியாமல் சுட்டுக் கொல்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.