நிபா வைரஸ் பயம்.. கேரளா பழங்களுக்கு சவுதியில் தடை.. பாதிக்கும் சுற்றுலா துறை!
கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழம், காய்கறிகளை சவுதி அரேபியா தடை செய்துள்ளது.
ரியாத்: கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழம், காய்கறிகளை சவுதி அரேபியா தடை செய்துள்ளது. நிபா வைரஸ் தாக்குதல் பிரச்சனை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக, இதுவரை மொத்தமாக 13 பேர் இறந்து இருக்கிறார்கள். இதை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
இந்த வைரஸ் இன்னும் கேரளாவை தவிர வேறு மாநிலங்களில் பரவவில்லை. இதற்கு எதிராக இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
எப்படி
நிபா வைரஸ் வெவ்வால்கள் மூலம் பரவும் நோயாகும். வௌவால்கள் இந்த வைரஸ் தாக்கிய பின் பழங்களில் அமர்வதால் பரவுகிறது. வெவ்வால்கள் தாக்கிய பழங்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது. இதனால் பழங்களை மிகுந்த கவனத்துடன் வாங்க வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. விலங்குகள் மூலம் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குறைந்தது
இந்த பிரச்சனை காரணமாக கேரளாவில் பழங்கள், காய்கறி விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. அதே சமயம் கேரளாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பழங்களின் விற்பனையும் அந்தந்த நாடுகளில் வியாபாரம் குறைந்தது. குறிப்பாக எண்ணெய்வள நாடுகளில் அதிக அளவில் மலையாளிகள் இருப்பதால், அந்த நாடுகளில் அதிக அளவில் கேரளா பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
தற்போது தடை
தற்போது நிபா வைரஸ் பிரச்சனை காரணமாக சவுதியில் கேரளா பழங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. கேரளாவை விட அதிக மலையாளிகள் சவுதியில்தான் இருப்பார்கள் என்று காமெடியாக சொல்லல்படுவது உண்டு. இந்த தடை காரணமாக அவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே விவசாயிகள் இதனால் அதிக நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
பிரச்சனை
அதேபோல் கேரளாவில் நிபா பிரச்சனை காரணமாக சுற்றுலா துறை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களை, எப்போதும் அதிக பயணிகள் அம்மாநிலத்திற்கு செல்வார்கள். ஆனால் தற்போது நிபா பாதிப்பு காரணமாக எச்சரிக்கையுடன் அங்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது அந்த மாநிலத்தின் வருமானத்தை பெரிய அளவில் பாதித்துள்ளது.