எபோலா பாதித்த நாட்டவருக்கு வேலைக்கான விசா இல்லை: சவுதி அரேபியா முடிவு
ரியாத்: எபோலா பாதித்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை பார்க்க விசா வழங்குவது இல்லை என்று சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளாக நைஜீரியா, லைபீரியா, கினியா, சியர்ரா லியோனில் எபோலா வைரஸ் பரவி வருகிறது. அந்த நாடுகளில் எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 1,500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் வைரஸ் தாக்குதலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் எபோலா வைரஸ் சவுதி அரேபியாவுக்குள் நுழைவதை தடுக்க அந்நாட்டு வெளியுறவு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகங்கள் சில பரிந்துரைகளை செய்துள்ளன. அதில் ஒன்று எபோலா பாதிப்பு உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலைக்கான விசா வழங்குவது இல்லை என்பதாகும்.
இந்த தற்காலிக விசா தடையால் சவுதியில் வேலையாட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி கினியா மற்றும் லைபீரியாவைச் சேர்ந்தவர்களுக்கு ஹஜ் மற்றும் உம்ரா விசா வழங்குவதை சவுதி நிறுத்தியது. கடந்த மாதம் சவுதியில் ஒருவர் எபோலா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் இறந்தபோதிலும் அவர் எபோலா காய்ச்சலுக்கு பலியாகவில்லை என்பது தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications