ஆட்டத்தை ஆரம்பித்த வடகொரியா... மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல்
சியோல்: ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச நாடுகள், ஐ.நா. சபையின் எதிர்ப்பை மீறி வடகொரியா அரசு தொடர்ந்து அணு ஆயுத சோதனை செய்து வந்தது. இதனால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனையை கைவிடுமாறு வடகொரியாவை, அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

மேலும், உலக நாடுகளின் எதிர்ப்பை தொடர்ந்து, அணு ஆயுத கூடங்களை மூடிய வடகொரியா, அமெரிக்க அதிபர் டிரம்புடன் 2 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியது. ஆனால், இந்த சந்திபில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனையடுத்து, தனது நட்பு நாடான ரஷ்யாவுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், பேச்சு நடத்த விரும்பினார். அதன்படி, விளாடிவோஸ்டாக் நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, சில வாரங்களுக்கு முன்பு, கிம் ஜாங் உன் சந்தித்து பேசினார்.
அப்போது, கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, வட கொரியாவின் முன்னேற்றம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டது.இதனிடையே, அணு அயுதங்கள் தயாரிப்பு காரணமாக, வடகொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை நீக்குவதற்கு ரஷ்யாவின் ஆதரவைக் கோருவதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யா சென்றதாகவும் சொல்லப்பட்டது.
அதே நேரம், தென்கொரியா - வடகொரியா இடையே சமீபத்தில்பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த நிலையில், தோல்வியில் முடிந்தது. சிறிது காலம் ஆயுத சோதனை எதுவும் நடத்தாமல் இருந்த வடகொரியா, சனிக்கிழமை மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதியில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் ஏவுகணைகள் சோதனை நடத்தப்பட்டதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications