ஹில்லாரி மகள் பிரசவத்திற்கு தனது பாதுகாப்புப் படையை வழங்க முன்வந்த ஒபாமா!
நியூயார்க்: முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனின் மகள் செல்சியின் பிரசவத்தின்போது, வாகனத் தடை ஏற்பட்டு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக தனது பாதுகாப்புப் படையின் பாதுகாப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிபர் ஒபாமா, கிளிண்டன் குடும்பத்தினரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நியூயார்க் நகரில்தான் தற்போது செல்சி இருக்கிறார். கர்ப்பிணியாக உள்ள அவருக்கு பிரசவ தேதி நெருங்கி விட்டது. ஆனால் நியூயார்க் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் அவரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் பாதிப்பு வந்து விடுமோ என்ற கேள்விகள் எழுந்தன.

இதுகுறித்து நியூயார்க் வந்திருந்த அதிபர் ஒபாமா கூறுகையில், நியூயார்க்கில் போக்குவரத்து சிக்கலாக உள்ளதாக கூறினார்கள். ஆனால் எனக்கு அப்படித் தெரியவில்லை. நான் வந்தபோது போக்கவரத்து பாதிப்பு எதையும் பார்க்கவில்லை.
இருப்பினும் தேவைபப்பட்டால், செல்சியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது எனது பாதுகாப்புப் படையை பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் கிளிண்டன் குடும்பத்தைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அவர்கள் உரிய நேரத்தில் மருத்துவமனையை அடைய உதவி செய்வார்கள் என்றார் ஒபாமா.
தனது பேச்சின்போது முன்னாள் அதிபர் பில் கிளிண்டனையும், ஹில்லாரி கிளிண்டனையும் அவர் தாத்தா, பாட்டி ஆகப் போவதற்காக வாழ்த்தினார்.
நியூயார்க்கில் போக்குவரத்து நெரிசல் இல்லை என்று ஒபாமாதான் கூறுகிறார். ஆனால் அவரும்போது போக்குவரத்தை நிறுத்தி அவர் எளிதாக செல்ல போக்குவரத்துப் போலீஸார் வழி விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பில் கிளிண்டன் - ஹில்லாரி தம்பதிக்கு செல்சி ஒரே மகள் ஆவார். இப்போதுதான் முதல் முறையாக அவர் தாயாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications