ஈராக்: கடத்தப்பட்ட இந்தியர்களில் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை?
பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் 39 பேரில் ஒருவரை தீவிரவாதிகள் சுட்டு கொன்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இத்தகவலை மத்திய வெளியுறவுத்துறை உறுதி செய்யவில்லை.
ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே உருவான மதக்கலவரம் தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா அரசுக்கு எதிராக சதாம் ஆதரவுப் படையான சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மொசூல் நகரில் வேலை செய்து வந்த இந்திய கட்டிடத் தொழிலாளர்கள் 40 பேர் கடந்த 10ம் தேதி கடத்தப்பட்டனர். இவர்கள் மொசூல் புறநகரில் உள்ள பஞ்சாலை மற்றும் அரசு கட்டிடங்களில் அடைத்து வைக்கப் பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்கும் பணியில் வெளியுறவுத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் ஒருவர் தப்பி வந்ததாக ஈராக் செம்பிறை சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து மீதமுள்ள 39 இந்தியர்களை தீவிரவாதிகள் வேறு இடத்திற்கு மாற்றி விட்டதாக தகவல்கள் வெளியாயின.
இதற்கிடையே கடத்தப்பட்ட 39 இந்திய கட்டுமானத் தொழிலாளர்களில் ஒருவரை தீவிரவாதிகள் சுட்டு கொன்று விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை இதுவரை யாரும் உறுதி செய்யவில்லை.
மேலும், கொல்லப்பட்ட இந்தியர் மேற்கு வங்கத்தை சேர்ந்த 4 தொழிலாளர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரது பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் வெளியாகவில்லை. ஈராக்கில் உள்ள ஒரு இந்தியர் மூலம் இந்த தகவல் வெளியானதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications