ஏமனில் இருந்து இதுவரை 3000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு: வி.கே.சிங்
சனா: உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஏமனில் இருந்து இதுவரை 3000க்கும் அதிகமான இந்தியர்கள் மீட்கப் பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
ஏமன் அரசுக்கு எதிராக ஹைதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி உள்ளிட்ட நாடுகள் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு உள்நாட்டுப் போர் வலுத்துள்ளது.

எனவே, ஏமனில் தங்கி இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ‘ஆபரேசன் ரஹத்' என்று பெயரில் இந்திய பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மீட்பு நடவடிக்கை கடந்த 30-ந்தேதி முதல் மும்முரமாக நடந்து வருகிறது. சுமார் 4 ஆயிரம் இந்தியர்கள் ஏமன் நாட்டில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், ஏமனில் இருந்து இதுவரை சுமார் 3000 பேர் மிட்கப்பட்டுவிட்டதாக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களை மீட்கும் போது, மனிதாபிமான அடிப்படையில் அவர்களுடன் பணியாற்றும் மற்ற நாட்டவரையும் இந்திய அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். அதன்படி வங்காளதேசம், நேபாளம், பாகிஸ்தான், உகாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 200க்கு அதிகமான பேரையும் இந்திய அதிகாரிகள் மீட்டனர்.
இந்திய கடற்படையின் இந்த நடவடிக்கையை கண்டு உலகநாடுகள் வியந்து உள்ளன. 26 நாடுகள் தங்கள் நாட்டவர்களையும் ஏமனில் இருந்து மீட்பதற்கு உதவிசெய்ய வேண்டும் என்று இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்து உள்ளன.
பக்ரைன், வங்காளதேசம், கியூபா, செக் குடியரசு, எகிப்து, டிஜிபோட்டி, பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, ஈராக், இந்தோனேசியா, அயர்லாந்து, லெபனான், மலேசியா, மாலத்தீவு, நேபாளம், நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், ருமேனியா, சுலவேனியா, இலங்கை, சிங்கப்பூர், ஸ்வீடன்ன், தாய்லாந்து, துருக்கி மற்றும் அமெரிக்கா கோரிக்கை விடுத்து உள்ளது என்று சையது அக்பரூதீன் டுவிட்டரில் செய்தி வெளியிட்டு உள்ளார்.
மோடி பாராட்டு:
இதற்கிடையே ஏமன் நாட்டிலிருந்து இந்தியர்களில் மீட்கும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட வெளியுறவு துறை அமைச்சர்களையும், சம்பந்தப்பட்ட துறைகளையும் பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
ஏமனில் இருந்து மீட்டு பத்திரமாக கொண்டு சேர்த்த வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா, வி.கே. சிங் பணிகள் பாராட்டுதலுக்குரியது. இவர்கள் மிக சிறப்பாக , ஒரு முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கு நமது பாதுகாப்பு படையினர் பக்கபலமாக இருந்துள்ளனர். இவர்கள் பணிக்கு நான் சல்யூட் அடிக்கிறேன். இந்தியர்கள் அல்லாதவர்களும் மீட்கப்பட்டிருப்பதும் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications