குல்பூஷண் ஜாதவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற பாக் ராணுவ தளபதி ஒப்புதல்
டெல்லி: இந்தியாவுக்காக, பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட, முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் வழங்கிய துாக்கு தண்டனையை நிறைவேற்ற, அந்நாட்டு ராணுவ தளபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்திய கடற்படை அதிகாரியாக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற குல்பூஷண் ஜாதவ் (46) கடந்த ஆண்டு மார்ச்சில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில், கைது செய்யப்பட்டார்.
ஈரான் நாட்டிலிருந்து, பாகிஸ்தானுக்குள் நுழைந்த குல்பூஷண், இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக, அந்நாட்டு ராணுவம் குற்றம் சாட்டியது.
குல்பூஷணுக்கு துாக்கு தண்டனை வழங்கி, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், குல்பூஷணின் துாக்கு தண்டனையை நிறைவேற்ற, பாக்., ராணுவ தளபதி ஜாவெட் பஜ்வா ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குல்பூஷண் ஜாதவின் துாக்கு தண்டனையை நிறைவேற்ற, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஒப்புதல் வழங்கியதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.