பாகிஸ்தானில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்.. பின்னணியில் பாக். ராணுவம்? அடுத்து என்ன? அதிமுக்கிய தகவல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அரசான நம்பிக்கையில்லாத் தீர்மானம் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அந்நாட்டு ராணுவம் சில முக்கிய தகவல்களைக் கூறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தானில் பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த 2019 தேர்தலில் புதிய பாகிஸ்தான் அமைப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்துத் தேர்தலைச் சந்தித்தார் இம்ரான் கான்.
அதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் ஆட்சியைப் பிடித்தார். இருப்பினும், இம்ரான் கானால் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியவில்லை.

பாகிஸ்தான்
இதனால் கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி அதிகரித்து வந்தது. இந்தச் சூழலில் தான் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி இம்ரான் கான் அரசில் இடம் பெற்றிருந்த பல்வேறு கூட்டணிக் கட்சிகளும் கூட அவருக்கு எதிராகத் திரும்பி விட்டன. இதனால் அவரது ஆட்சி நிச்சயம் கவிழும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்
இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இன்று நாடாளுமன்றம் கூடிய போது இம்ரான் கான் அவைக்கு வரவில்லை. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் செல்லாது என்றும் இது பாக். அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் தீர்மானத்தை ரத்து செய்வதாகப் பொறுப்பு சபாநாயகர் காசிம் கான் அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள் திட்டம்
ஷெபாஸ் ஷெரீபை பாகிஸ்தான் புதிய பிரமராக ஆக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்த நிலையில், சபாநாயகரின் இந்த அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் அதிருப்தி அடைந்தனர். மேலும், அவையிலேயே அமளியில் ஈடுபட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாகப் பாகிஸ்தான் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்ற அவையில் போட்டி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் கூட்டியுள்ளனர்.

ராணுவம்
தனது ஆட்சி கவிழாமல் இருக்க இம்ரான் கான் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார். இருப்பினும், அதிகாரமாக்கப் பாகிஸ்தான் ராணுவம் இம்ரான் கானுக்கு எதிராக உள்ளதாகக் கூறப்படுகிறது. பல்வேறு விவகாரங்களில் இம்ரான் கானின் செயல்பாடுகள் ராணுவத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் புகழும் வகையில் இம்ரான் கான் பேசியது அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுக்குக் கோபத்தைக் கிளப்பி உள்ளது.

ட்விஸ்ட்
இதனால் பாக். ராணுவ தலைமை பொறுப்பில் உள்ள அனைவரும் இம்ரான் கானுக்கு எதிராக உள்ளனர். இம்ரான் கான் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதே ராணுவத்தின் விருப்பமாக இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் குழப்பத்தை ஏற்படுத்தியது. பாக். ராணுவம் திடீரென இம்ரான் கானுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் இதன் காரணமாகவே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறவில்லை என்று பலரும் குறிப்பிட்டனர்.

விளக்கம்
இந்தச் சூழலில் இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கும் ராணுவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்குப் பதில் அளித்த பாகிஸ்தான் ராணுவ இயக்குநர் ஜெனரல் பாபர் இப்திகார், "நிச்சயமாக இல்லை. இன்று நடைபெற்ற சம்பவத்திற்கும் ராணுவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என்று விளக்கம் அளித்துள்ளார். பாக். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 3 மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications