ஊழல் வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் கிலானிக்கு பிடிவாரண்டு... நீதிமன்றம் கிடுக்கிப்பிடி
கராச்சி : ஊழல் வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து லஞ்ச தடுப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தானின் 16-வது பிரதமர் யூசுப் ராஸா கிலானி . இவர் அங்கு 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை பிரதமர் பதவி வகித்தார். தற்போது அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மத்திய செயற்குழு துணைத்தலைவர் பதவி வகிக்கிறார். அந்தக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் பதவியில் இருப்பவர், மக்தூம் அமின் பாஹிம். இவர் முன்னாள் வர்த்தக அமைச்சராக பதவி வகித்தவர்.

இவர்கள் இருவரும் வர்த்தக அபிவிருத்தி ஆணையத்தில், பல்வேறு போலி கம்பெனிகளுக்கு பல கோடி ரூபாய் மானியங்களை வழங்கி, பெரும் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்கள்மீது 12 ஊழல் வழக்குகள் உள்ளன. இந்த ஊழல் வழக்குகளில் கராச்சியில் அமைந்துள்ள லஞ்சத்தடுப்பு நீதிமன்றத்தில், எப்.ஐ.ஏ. என்னும் மத்திய புலனாய்வு முகமையினர் நேற்று இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் கிலானியும், மக்தூம் அமினும் ஆஜர் ஆவதற்கு உத்தரவிட்டு லஞ்சத்தடுப்பு நீதிமன்றம் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் அவர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகள் கராச்சி லஞ்சத்தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது இறுதி குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கிலானியையும், மக்தூம் அமினையும் கைது செய்து அடுத்த மாதம் 10-ந் தேதி ஆஜர்படுத்துவதற்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டுகளை பிறப்பித்து உத்தரவிட்டார். இது பாகிஸ்தான் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி கிலானி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "செப்டம்பர் 10-ந் தேதிக்கு பதிலாக வரும் 31-ந் தேதி நான் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவேன். கடந்த சில மாதங்களுக்கு முன் இதேபோன்று கோர்ட்டு பிடிவாரண்டுகளை பிறப்பித்தது. ஆனால் நான் ஜாமீன் இன்றியே விடுவிக்கப்பட்டேன் எனவும் கூறினார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவர் ஆசிப் சர்தாரிக்கு நெருக்கமான டாக்டர் ஆசிம் உசேன் ஏற்கனவே ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications