"தீவிரவாதிகளை இந்தியாவுக்கு நாடுகடத்த ரெடி.." அந்தர் பல்டி அடித்த பாகிஸ்தான் பிலாவல் பூட்டோ! பின்னணி
இஸ்லாமாபாத்: பல சர்வதேச தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருக்கும் நிலையில், அவர்களை நாடுகடத்த இந்தியா தீவிரமாக முயல்கிறது. இருப்பினும், பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்தே வருகிறது. இதற்கிடையே சர்வதேச தீவிரவாதிகளான ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் ஆகியோரை நாடுகடத்துவதில் தனக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ கூறியிருக்கிறார்.
பல காலமாகவே எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது. இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவிகளைச் செய்து வருகிறது. மும்பை தாக்குதல் உள்ளிட்ட தீவிரவாதத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட பல தீவிரவாதிகள் பாகிஸ்தானில் தான் இருக்கிறார்கள்.

ஆட்சேபணை இல்லை
அவர்களை நாடுகடத்த இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது. இருப்பினும், பாகிஸ்தான் அதற்கு முட்டுக்கட்டை போட்டே வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ மொத்தமாக நேர்மாறான சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு பாகிஸ்தான் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை என்றும் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்க மாட்டோம்
முன்னதாக அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு பிலாவல் பூட்டோ அளித்த பேட்டியில், "இந்தியா ஒத்துழைப்பு வழங்க முன்வந்தால், பாகிஸ்தான் குறிப்பிட்ட நபர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த தயாராக உள்ளது. லஷ்கர்-இ-தொய்பா (LeT) தலைவர் ஹபீஸ் சயீத் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தலைவர் மசூத் அசார் ஆகியோரை இந்தியாவுக்கு நல்லெண்ண அடிப்படையில் நாடு கடத்த பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. விரிவான பேச்சுவார்த்தை நடத்தினால் நிச்சயம் இதெல்லாம் நடக்கும். இதுபோன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிச்சயம் எதிர்க்காது" என்றார்.
யார் இவர்கள்?
லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) ஆகிய இரண்டு அமைப்புகளும் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன. 26/11 மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீத் தற்போது பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் 33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
மற்றொரு தீவிரவாதியான மசூத் அசார், இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவர் ஆவார். 2001 நாடாளுமன்றத் தாக்குதல், 26/11 மும்பை தாக்குதல்கள், 2016 பதான்கோட் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல பெரிய தாக்குதல்களுடன் தொடர்புடையவர். 1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 காந்தஹார் கடத்தல் சம்பவத்தில் பணயக்கைதிகள் மாற்றப்பட்டபோது அவர் இந்தியாவில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்தியா தான் காரணமாம்
ஆனால், இந்தத் தடைகள் பாகிஸ்தானில் வெறும் பெயரளவிலேயே இருக்கிறது. ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் தீவிரவாதி பாகிஸ்தானுக்குள் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதோடு, பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் தண்டனையின்றித் தங்கள் அமைப்புகளை இயக்குகின்றனர். இது குறித்து பிலாவல் கூறுகையில், "இவர்கள் மீது பாகிஸ்தானில் நடக்கும் வழக்குகள் பயங்கரவாத நிதி தொடர்பானவை. ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் ஆகியோரை எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்காக வழக்குத் தொடர்வது கடினம், ஏனெனில் இந்தியா ஒத்துழைக்கவில்லை. விசாரணை நடத்த இந்தியா ஒத்துழைக்க மறுக்கிறது.
ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதும், எல்லை தாண்டி தீவிரவாதத்தில் ஈடுபட்டார் என்பதை நிரூபிக்க இந்தியாவில் இருந்து சாட்சியம் அளிக்க நபர்கள் வருவதற்கும் முக்கியம். இதற்கு இந்தியா ஒத்துழைக்கத் தயாராக இருந்தால், எந்தவொரு தனிநபரை நாடு கடத்துவதிலும் எந்தத் தடையும் இருக்காது என்று நான் நம்புகிறேன்" என்றார்.
ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் பாகிஸ்தானிலேயே சுதந்திரமாக உலா வருவதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்துக் கேட்டபோது லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகப் பூட்டோ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications