கழுத்தை நெரிக்கும் கடன்! "பிச்சை தான் எடுக்கிறோம்" விரக்தியில் புலம்பும் ஷெரீப்! பாகிஸ்தான் நிலைமை மோசம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. அவர்கள் சர்வதேச நாணய நிதியம், ஆசிய வங்கி என வரிசையாகக் கடன் வாங்கினாலும் அதைச் சரியாகப் பயன்படுத்தாததால் சிக்கல் தீருவதில்லை. இதற்கிடையே சமீபத்தில் பாகிஸ்தான் குறித்து வெளியாகியுள்ள டேட்டா பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த மாதம் ஏற்பட்ட இந்தியா பாகிஸ்தான் மோதலில்.. இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமலேயே பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வரக் கோரிக்கை விடுத்தது. இது அனைவருக்கும் தெரியும். ஆனால், உள்நாட்டில் ஏதோ மோதலில் வென்றது போல ஒரு பிம்பத்தைப் பாகிஸ்தான் உருவாக்கி வருகிறது.

கடன் அதிகரிப்பு
ஆனால், பாகிஸ்தான் பொருளாதாரம் அந்த நாட்டின் உண்மை நிலையைக் காட்டி கொடுத்துவிடுகிறது. பாகிஸ்தான் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே போகிறது. பாகிஸ்தான் கடன் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதை வேறு யாரும் சொல்லவில்லை.. இரு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட பாகிஸ்தான் பொருளாதார ஆய்வு அறிக்கையிலேயே அது தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நிதி நிலைமை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
கழுத்தை நெரிக்கும் கடன்
இப்போது பாகிஸ்தானின் மொத்த கடன் (மார்ச் 2025) 76,007 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய், அதாவது 76 டிரில்லியன் பாக். ரூபாயாக இருக்கிறது. கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் இந்தளவுக்கு உச்சத்தை எட்டியதே இல்லை. வரலாறு காணாத அளவுக்குப் பாகிஸ்தான் கடன் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதை இது காட்டுகிறது. இந்திய ரூபாயில் மதிப்பில் பார்த்தோம் என்றால் ரூ.23.1 டிரில்லியன்.. அமெரிக்க டாலரில் 269.344 பில்லியனாக பாகிஸ்தான் கடன் இருக்கிறது..
பாகிஸ்தானின் கடன் கடந்த நான்கு ஆண்டுகளில் ஏறக்குறைய இரு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த இது 2020-21இல் பாகிஸ்தான் கடன் ரூ. 39,860 பில்லியனாக இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அதன் கடன் ரூ. 17,380 பில்லியனாக இருந்தது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் அதன் கடன் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது.
எல்லா பக்கமும் கடன்
இந்த ரூ.76,007 பில்லியன் கடனில் உள்நாட்டுக் கடன் ரூ. 51,518 பில்லியன் ஆகும். அதேபோல வெளிநாட்டுக் கடனாக ரூ. 24,489 பில்லியன் உள்ளது. அந்த பொருளாதார ஆய்வறிக்கையில் மேலும், "அதிகப்படியான அல்லது மோசமாக நிர்வகிக்கப்படும் கடன் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.. அதாவது அதிகரித்து வரும் வட்டி சுமைகள் கவனிக்கப்படாவிட்டால் அது நீண்ட கால நோக்கில் பாகிஸ்தான் நிதி நிலைமையைப் பாதிக்கும். நாட்டின் பொருளாதார பாதுகாப்பிற்கே சிக்கலை ஏற்படுத்தும். 2025 நிதியாண்டில் முதல் ஒன்பது மாதங்களில் கடனின் 6.7 சதவீதமாக அதிகரித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதையே இந்த டேட்டா உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பாகிஸ்தான் கடந்த சில காலமாகவே தொடர்ச்சியாகச் சர்வதேச அமைப்புகள், பல நாடுகளிடம் கையேந்தியே வருகிறது. இதுபோல கடன் வாங்கினால் அதைச் சரியாகப் பயன்படுத்திச் சிக்கலைத் தீர்க்க வேண்டும்.
யாரும் கடன் தர மாட்டார்கள்
ஆனால், பாகிஸ்தான் இந்த தொகையை வளர்ச்சி பணிகள், சிக்கல்களைத் தீர்க்க பயன்படுத்தவில்லை. இதன் காரணமாகவே பாகிஸ்தான் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட பாகிஸ்தான் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் கடன் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே நிலை தொடர்ந்தால் நிச்சயம் அவர்களுக்கு வரும் காலங்களில் கடன் கூட கொடுக்காது.
புலம்பும் ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூட இதை ஒப்புக் கொள்ளும் வகையிலேயே பேசியிருந்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இன்று நாம் எந்த நட்பு நாட்டிற்குச் சென்றாலும் அல்லது அந்த நாட்டின் தலைவருக்கு போன் போட்டாலும் நாம் அவர்களிடம் பணம் கேட்டு பிச்சை எடுக்க வந்துவிட்டோம் என்று நினைக்கிறார்கள். சிறிய நாடுகள் கூட பாகிஸ்தானை விஞ்சிவிட்டது. கடந்த 75 ஆண்டுகளாக நாம் பிச்சைப் பாத்திரத்துடன் அலைந்து கொண்டிருக்கிறோம்" என்றும் அதிருப்தியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications