'இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறோம்; பிரச்சினையை பேசி தீர்ப்போம்' ..மோடிக்கு, இம்ரான்கான் கடிதம்!
இஸ்லாமாபாத்: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான, நல்லுறவு வேண்டும் என்பதே பாகிஸ்தான் மக்களின் விருப்பமாகும் என்று பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார்.
பாகிஸ்தான் எப்போது தனி நாடு ஆகியதோ அன்றில் இருந்தே இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பாம்பும், கீரியுமாக இருந்து வருகின்றன.

பாகிஸ்தானின் அடாவடி
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அறிவிக்கப்பட்ட போதிலும், காஷ்மீரின் சில பகுதிகள் எங்களுக்கு சொந்தமானது என்று பாகிஸ்தான் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. காஷ்மீரில் பிரினைவாத தலைவர்களை தூண்டி விட்டு, அங்குள்ள வாலிபர்களை வன்முறை பாதைக்கு இழுத்து விட்டு இந்தியாவுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தியது பாகிஸ்தான்.

உறவை முறித்துக் கொண்ட இந்தியா
இதற்கு ஒரு முடிவு கட்ட ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை அதிரடியாக ரத்து செய்த மத்திய அரசு, அதனை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஆனாலும் தொடர்ந்து இந்திய எல்லையை சீண்டுவதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் புகுவதற்கு வசதியாக பயங்கரவாதிகளுக்கு உதவிகளை செய்து வருகிறது. மும்பை தாக்குதல், புல்வாமா, பதன்கோட் தாக்குதல் ஆகிய பெரும் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்ட இந்தியா, பாகிஸ்தான் உறவை முழுமையாக முறித்துக் கொண்டது.

இம்ரான்கானுக்கு மோடி வாழ்த்து
ஆனால் சமீபத்திய சில மாதங்களில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் இணக்கமான சூழ்நிலை ஏற்படும் நிலை உருவாகி வருவது இரு நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கொரோனவால் பாதிக்கப்பட்டபோது அவர் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

மோடிக்கு இம்ரான்கான் நன்றி
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் தேசிய தினத்தில் இம்ரான்கானுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி, ' இந்தியா அண்டை நாடுகளுடன் நட்புறவுவை விரும்புவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு நிலவ, பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை கடைபிடிப்பது அவசியமானது என்றும் மோடி கூறி இருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார்.

அமைதியை விரும்புகிறோம்
இந்த கடிதத்தில் இம்ரான்கான் கூறியதாவது:- இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான, நல்லுறவு வேண்டும் என்பதே பாகிஸ்தான் மக்களின் விருப்பமாகும். ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து தெற்காசியாவில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ விரும்புகிறோம். ஆக்கபூர்வமான மற்றும் முடிவு சார்ந்த உரையாடலுக்கான சூழலை உருவாக்க வேண்டியது அவசியம் என்று இம்ரான்கான் கடிதம் மூலம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications