ஏவுகணை தயாரித்து வெற்றிகரமாக பரிசோதித்த பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள்!!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசு ஒருபக்கம் சீனாவிலிருந்து முதலீடுகளை வாங்கிக் குவித்து வருகிறது.. மறுபக்கம் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் சுயமாக ஏவுகணையைத் தயாரித்து அதை ஏவியும் பார்த்து கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தான் தலிபான்கள் என அழைக்கப்படும் தெஹரீக் இ தலிபான் அமைப்பினர் சுயமாக ஒரு ஏவுகணையைத் தயாரித்துள்ளனர். அதை தற்போது வெற்றிகரமாக ஏவிப் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உமர் 1 (Omar-1) என்று அந்த ஏவுகணைக்கு அவர்கள் பெயர் சூட்டியுள்ளனர். அந்த ஏவுகணையை ஏவி பரிசோதித்தது தொடர்பான வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், ஏவுவதற்கு முன்பு ஏவுகணையின் அனைத்துப் பாகங்கங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும் காட்சி உள்ளது. அதன் வடிவமைப்புதான் இந்த ஏவுகணையின் விசேஷம் என்றும் பாகிஸ்தான் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகம்மது குரஸ்ஸானி கூறுகையில், சூழ்நிலைக்கேற்ப ஏவுகணையைப் பிரித்து சேர்க்க முடியும். அது இதன் சிறப்பம்சமாகும். மேலும் எதிரி இலக்கை மிகத் துல்லியமாக தாக்கக் கூடிய திறன் படைத்தது உமர் 1. கடவுளின் அருளால் விரைவில் எங்களது எதிரிகளை ஓடச் செய்வோம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இது மட்டுமல்லாமல் பல்வேறு வகையான நவீன ஆயுதங்களை உருவாக்கும், தயாரிக்கும் திறன் எங்களது தொழில்நுட்பப் பிரிவினரிடம் உள்ளது. நாங்கள் மிகச் சிறந்த போர் வீரர்கள் மட்டுமல்ல, சிறந்த தொழில்நுட்ப அறிவு பெற்றவர்களும் கூட. தற்கொலைப் படையினருக்குகத் தேவையான ஜாக்கெட், தற்கொலைப் படை வாகனங்கள், கையெறி குண்டுகள், ஆன்டி ஜாமர் கருவிகள் உள்ளிட்டவற்றைத் தயாரிப்பதில் வல்லவர்கள் என்றார் அவர்.
வடக்கு வசிரிஸ்தானில் அட்டகாசம் செய்து வரும் இந்தத் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இதுவரை 2000க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்று விட்டதாக அது கூறுகிறது. இந்த நடவடிக்கை தொடர்வதால் இதுவரை கைபர் பழங்குடியினர் பகுதியிலிருந்து பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.