பாகிஸ்தானில் ராணுவ புரட்சி? அசிம் முனீருக்கு குவியும் அதிகாரம்.. தூக்கி எறியப்படும் மக்களாட்சி?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சத்தமே இல்லாமல் ஏகப்பட்ட அரசியல் மாற்றங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு கூடுதல் அதிகாரம் குவியவுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானில் மீண்டும் மக்களாட்சி நீக்கப்பட்டு, ராணுவ ஆட்சி அமையும் ஆபத்தான சூழல் உருவாகியிருக்கிறது.
பாகிஸ்தானில் ராணுவத்தின் ஆதிக்கம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். கடந்த காலங்களில் அங்குப் பல முறை மக்கள் ஆட்சி வீழ்த்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு ராணுவத்தில் நடக்கும் சிறு விஷயங்களும் பெரும் கவனத்தைப் பெரும். அங்குக் கடந்த 2022 முதல் ராணுவ தளபதியாக இருப்பவர் அசிம் முனீர். அவருக்குச் சமீபத்தில் தான் ஃபீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு தரப்பட்டது.

கூடுதல் அதிகாரம்
அந்த ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு இப்போது மேலும் கூடுதல் அதிகாரம் வரவிருக்கிறது. இதற்காக ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு தனது அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ராணுவத்திற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. கடந்த சில நாட்களாகவே இது தொடர்பான தகவல் வெளியாகி வந்தது.
இதற்கிடையே அதை பாகிஸ்தான் அரசு இப்போது உறுதி செய்துள்ளது. 27வது அரசியலமைப்புத் திருத்தத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஆயுதப் படைகளின் கட்டமைப்பு தொடர்பான மாற்றங்கள் இதில் இருக்கும் என தெரிகிறது. பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் டார் அந்நாட்டின நாடாளுமன்றத்திலேயே இதை உறுதி செய்தார். இந்த நடவடிக்கை, அசிம் முனீரின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்றே பலரும் நினைக்கிறார்கள்.
ஏன் ஆபத்து
இது பாகிஸ்தானுக்குச் சிக்கலையே கொடுக்கும். ஏனென்றால் பாகிஸ்தானில் கடந்த காலங்களில் பல முறை ராணுவ ஆட்சி அமைந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கவிழ்க்கப்பட்ட ராணுவ தலைமை ஆட்சிக்கு வருவது அங்குப் பல முறை நடந்துள்ளது. 2008க்கு பிறகு அங்குத் தேர்தல் மூலமாகவே அரசுகள் அமைந்தாலும் கூட இன்னுமே ராணுவத்திற்கு அங்கு கணிசமான அளவுக்குச் செல்வாக்கு இருக்கவே செய்கிறது. அப்படியிருக்கும்போது ராணுவத்திற்குக் கூடுதல் அதிகாரம் என்பது எச்சரிக்கை மணியை அடிப்பதாகவே இருக்கிறது.
என்ன மாற்றம்
இந்தச் சட்டத் திருத்தத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் வரும் என்பது குறித்த தகவல்களும் இப்போது வெளியாகியுள்ளது. இந்த 27வது திருத்தத்தின் மூலம் ராணுவத் தளபதி மற்றும் ஆயுதப் படைகளை நிர்வகிக்கும் அரசியலமைப்பின் 243வது பிரிவில் திருத்தங்கள் செய்யப்படுகிறது. மேலும், அரசியலமைப்பு நீதிமன்றங்களை அமைப்பது, தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்கும் செயல்முறையை எளிதாக்குவது, நிர்வாக மாஜிஸ்திரேட்டுகளை நியமிப்பது மற்றும் நீதிபதிகளின் இடமாற்றம் போன்ற விஷயங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் கூறப்படுகிறது.
மேலும், இயற்கை வளங்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதில் மத்திய அரசுக்குக் கூடுதல் அதிகாரத்தைக் கொடுக்கிறது. மாகாணங்களின் பங்கைக் குறைக்கிறது. மேலும், கல்வி மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சகங்களின் கட்டுப்பாட்டை மாகாணங்களிடமிருந்து மத்திய அரசுக்கு மாற்றவும் வழிவகை செய்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ராணுவத்திற்கும் மத்திய அரசுக்கும் அதிகாரத்தை குவிப்பதாக இந்த மாற்றங்கள் இருக்கிறது.
அசிம் முனீர்
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு நடந்த மோதலில் இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்து சரணடைந்தது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், அசிம் முனீருக்கு பதவி உயர்வு தரப்பட்டது. மேலும், அவர் ராணுவத்தைத் தாண்டி அரசு நடைமுறைகளிலும் தொடர்ச்சியாகத் தலையிட்டு வருவதாகவே தெரிகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்கா சென்றபோதும் முனீர் உடன் சென்றார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications