பாரீஸ் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: ஈபிள் டவர் காலவரையின்றி மூடப்பட்டது
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து அந்த நாட்டிலுள்ள உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவரின் விளக்குகள் மங்கல் ஒளியில் ஒளிரவிடப்பட்டன. மேலும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு இடங்களில் குழுக்களாகப் பிரிந்து தீவிரவாதிகள் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதில் 127 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளே காரணம் என பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் வெளியான சிறிது நேரத்திலேயே ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், பாரீஸ் தாக்குதலுக்கு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தெரிவித்துள்ளது என ஹாலண்டே உறுதிபடுத்தியுள்ளார்.
இந்நிலையில், உலக அதிசயங்களில் ஒன்றான பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈபிள் டவரில் ஏறி நகரின் அழகை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதையடுத்து டவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஈபிள் டவர் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications