குடிநீரில் கொடிய விஷத்தைக் கலந்து... பாரிஸ் மக்களைக் கொல்ல தீவிரவாதிகள் புதிய சதி?
பாரிஸ்: குடிநீரில் கொடிய விஷத்தைக் கலந்து பாரிஸ் மக்களை கொல்ல ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இதையடுத்து, பாரிஸ் நகருக்கு தேவையான குடிநீரை வினியோகிக்கும் ஆறு நீரேற்று நிலையங்களைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் இசையரங்கங்கள் மற்றும் கால்பந்து மைதானத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 130க்கும் அதிகமான அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் உலகையே அதிரச் செய்தது. இந்நிலையில், பாரிஸ் நகரில் குடிநீரில் விஷம் கலக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது.
பிரான்ஸ் நகரில் குழந்தைகளுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதற்காக நெக்கர் என்ற அரசு மருத்துவமனை இயங்கி வருகின்றது. இங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் முக்கிய ஊழியர்களை நச்சுமிகுந்த ரசாயனங்களின் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க சிறப்பு மேலாடைகள், கையுறை மற்றும் காலணிகள் வாங்கி சேமித்து வைக்கப்பட்டிருந்தன. சமீபத்தில் அவற்றில் 12 பாதுகாப்பு உபகரணங்கள் திருட்டுப்போயின.
அதன் அடிப்படையில், இந்த சிறப்பு உடைகளை அணிந்தபடி, தீவிரவாதிகள் பாரிஸ் நகருக்கு குடிநீர் வினியோகிக்கும் முக்கிய நீர் நிலையங்களுக்குள் ஊடுருவி, குடிநீரில் கொடிய விஷத்தை கலக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதன்மூலம் மக்களை கொத்துக் கொத்தாக அவர்கள் திட்டமிட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரான்ஸ் பிரதமர் மேனுவேல் வால்ஸ், "இப்போதைக்கு நாம் எதையும் ஒதுக்கிவிட்டு யோசிக்க முடியாது. எந்த நேரத்திலும், ரசாயன ஆயுதம் உள்ளிட்ட எவ்வித தாக்குதலையும் ஐஎஸ் தீவிரவாதிகள் நம்மீது நடத்தக்கூடும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பாரிஸ் நகருக்கு தேவையான குடிநீரை வினியோகிக்கும் ஆறு நீரேற்று நிலையங்களைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய உயரதிகாரிகள் தவிர இதர பணியாளர்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்படுகின்றனர்.
நாடு முழுவதும் மூன்று மாதங்களுக்கு நெருக்கடி நிலை அமலில் இருக்கும் என பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த புதிய தகவலால் பாரிஸ் நகர மக்கள் மேலும் பீதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications