அரசுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை: பியூஷ் கோயல் உறுதி
லண்டன்: இந்தியா-யுகே வாரம் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இரு நாடுகளையும் சேர்ந்த அரசியல், பொருளாதாரம் என பலதரப்பட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் கேகேஆர் இந்தியா குளோபல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சஞ்சய் நாயர் பேசியதாவது:
இந்திய அரசு வங்கிகளை தனியார்மயமாக்குவது பற்றி யோசிக்க வேண்டும். இந்திய அரசு மானியங்களை நிறுத்தியுள்ளது நல்ல முயற்சி. இந்தியாவில் எல்லா துறைகளுமே வளரும் துறைகளாகவே உள்ளதால் இன்னும் நிறைய நாம் பயணிக்க வேண்டியுள்ளது. பண வீக்கத்தின் பயம் ரியல் எஸ்டேட் மற்றும் ஜுவல்லரிகளை வாங்குவதை நோக்கி மக்களை தள்ளுகிறது. நலத்திட்டங்களுக்காக அரசு அதிகம் செலவிடுவதை நிறுத்தியுள்ளது வரவேற்கத்தக்க மாற்றம். இவ்வவாறு அவர் தெரிவித்தார்.
பார்தி என்டர்பிரைசஸ் துணை தலைவர் ராகேஷ் பார்தி மிட்டல் பேசுகையில், உலகிலேயே நேரடி அன்னிய முதலீட்டை எளிமையாக வைத்திருக்கும் நாடு இந்தியா. மாநில அரசுகளும் கூட தேவைக்கு அதிகமாகவே உதவிகளை செய்து தர தயாராக, உள்ளன. தொழில் துவங்க சாதக சூழல் உருவாகியுள்ளது. இப்போதைய வேலை வாய்ப்பு என்பது அங்கீகரிக்கப்பட்ட துறைகளை நோக்கி நகர்ந்தபடி உள்ளது.
இந்தியாவின் விவசாயத்துறையில் தனியார்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றார்.
யுகே-இந்தியா வாரம் நிகழ்வில் இன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வீடியோ கான்பரன்ஷ் மூலம் பங்கேற்று கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:
கடந்த 4 வருடங்களாக இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்துவதில் செலவிட்டுள்ளோம். இன்னும் 30 ஆண்டுகளுக்கான அடித்தளம் இது. நிறைய அடிப்படை கட்டமைப்பு மாற்றங்களை கடந்த 48 மாதங்களில், செய்து வந்துள்ளோம். நாம் மரபு ரீதியாக, உடைபட்ட பொருளாதாரத்தை கொண்டவர்கள். நிதி பற்றாக்குறை அதிகமாக உள்ளது. பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் இருக்கிறது.
2-4 சதவீதமாக இருந்த பணவீக்கம், கடந்த சில மாதங்களாக சற்று அதிகரித்துள்ளது. தற்போது நிதி பற்றாக்குறை கட்டுப்பாட்டில் உள்ளது. 10 மாதங்களுக்கான இறக்குமதிக்கு தேவைப்படும் நிதி உள்ளது. 2013ல் இந்திய ரூபாய் மதிப்பு டாலருடன் ஒப்பிட்டால் 69 ரூபாயாக இருந்தது. 32 பில்லியன் டாலர் கடன்களை இந்தியா கடந்த 4 வருட காலத்தில் திருப்பி செலுத்தியுள்ளது. தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தற்போது சுமார் 67 ரூபாயாக உள்ளது. மோடி அரசு இந்திய பொருளாதாரத்தை மீட்சி பாதைக்கு கொண்டு வந்துள்ளது. ஒழுங்குபடுத்தியுள்ளது.
இந்தியாவில் சுத்தம், சுகாதாரம் போன்றவை ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் வாழுவதை பெருமையாக கருத ஆரம்பித்துள்ளனர். மின்சாரம், ரோடு, குடிநீர் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்தியா, தற்போது இணையதளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்தியா வருங்காலத்தை சந்திக்க தயார்படுத்தப்பட்டுள்ளது. சீனா இதைத்தான் செய்திருந்தது. இப்போது எதிர்காலத்தை சந்திக்க இந்தியா தயாராக உள்ளது.
3.3 சதவீதம் என்ற நிதி பற்றாக்குறை இலக்கிற்குள் கட்டுப்படுத்துவோம் என்ற நம்பிக்கையுள்ளது. மொத்த வரி வசூல் குறைந்துவிட கூடாது, அதேநேரம் சில துறைகளுக்கு அரசு ஆதரவு அளிக்க வேண்டிய தேவையுள்ளது. மறைமுக வரி, 7.1 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் முழு கொள்ளளவு இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தலை நோக்கிய ஆண்டு இது என்றபோதிலும், மக்களுக்கும், நாட்டுக்கும் தேவையான நடவடிக்கையை மட்டும் எடுங்கள் என பிரதமர் எங்களிடம் அறிவுறுத்தியுள்ளார். தேர்தலை மனதில் வைக்க வேண்டாம் என கூறியுள்ளார். நல்ல அரசுக்கு இந்திய மக்கள் வாக்களிப்பார்கள் என்று பிரதமர் மோடியும், என்போன்றோரும் உறுதியாக நம்புகிறோம். எனவே கவர்ச்சி திட்டங்களை அறிவிக்கப்போவதில்லை.
வங்கித் துறை மிகவும் வலிமையானதாக இருக்க வேண்டும் என்பதே உலகின் அனைத்து நாடுகளும் விரும்புவது. இந்தியாவில் இன்னும் பல மக்கள், வெளியுலக தொடர்பு இல்லாத கிராமங்களில் வசிக்கிறார்கள். நாங்கள் இப்போது வங்கிகளை பலப்படுத்த செய்ததைவிட இன்னும் அதிகம் செய்திருக்க வேண்டும். வங்கி துறைக்கு வழங்கப்படும் ஒவ்வொரு ரூபாயும், அவை பலமான பிறகு பலமடங்காக அரசுக்கே திரும்ப வரும். முத்ரா என்ற திட்டத்தின் மூலம், 120 மில்லின் கடன்களை கொடுத்துள்ளோம். இந்த கடன் மூலம், சொந்த காலில் மக்களை நிற்க வைத்துள்ளோம். நாங்கள் தொடர்ந்து வங்கிகளை வலுப்படுத்துவோம். அரவங்கிகளை தனியார்மயமாக்குவது நல்ல ஐடியா இல்லை. அதுபோல நடக்காது. இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.
முன்னதாக, தொழில் துறையினர் பலரும் இந்திய அரசுதுறை வங்கிகளை தனியார்மயமாக்குவதுதான் தற்போதை வங்கி துறை பிரச்சினைகளை தீர்க்க உதவும் என இந்த நிகழ்ச்சியின் மூலம் வலியுறுத்தியிருந்தனர்.