"மனித குலம் மீதான தாக்குதல்.." பாக். எதிராக கண்கள் சிவந்த மோடி! சீனா இருக்கும்போதே சரமாரி தாக்கு
ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தார். மேலும், தீவிரவாத விவகாரத்தில் நிச்சயம் இரட்டை நிலைப்பாடு இருக்கவே கூடாது என்ற அவர், தீவிரவாதம் என்பது மனிதக் குலத்திற்கே எதிரானது என்றும் இதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்தினார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டில் பயங்கரவாதப் பிரச்சினை குறித்துப் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீரின் பஹல்காமில் அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் மோடி
'அமைதி & பாதுகாப்பு மற்றும் உலகளாவிய நிர்வாகத்தின் சீர்திருத்தம்' குறித்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கைக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த மாநாட்டில் பஹல்காம் தாக்குதல் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானை மறைமுகமாகச் சாடினார். இது தொடர்பாகப் பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "மனிதக்குலம் எதிர்கொள்ளும் மிக மோசமான சவால்களில் பயங்கரவாதமும் ஒன்று. சமீபத்தில், பஹல்காமில் இந்தியா மனிதாபிமானமற்ற மற்றும் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொண்டது. இது மனிதக்குலம் மீதான தாக்குதல்..
இரட்டை நிலைப்பாடு
இங்கு இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை. எந்தவொரு நாடாவது பயங்கரவாதத்திற்கு நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவை வழங்கினால், அதற்குரிய விலையை அது கொடுக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தடைகளை விதிப்பதில் தயக்கம் காட்டக்கூடாது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், அதை ஆதரிப்போரையும் நிச்சயம் ஒரே மாதிரி எடைபோட முடியாது.
தனிப்பட்ட அல்லது அரசியல் ஆதாயத்திற்காகப் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை ஏற்கவே முடியாது. அனைத்து நாடுகளும் தீர்க்கமாகச் செயல்பட வேண்டும். மேலும் மகாத்மா காந்தி மற்றும் கௌதம புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு இந்தியா அமைதியின் வழியைத் தொடரும். சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், மனிதக்குலத்தின் நலனுக்கு அமைதியே சிறந்த வழி" என்றார்.
பிரதமர் மோடி அழைப்பு
முன்னதாக, சர்வதேச நிர்வாகக் கட்டமைப்பில் விரிவான சீர்திருத்தங்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். 21-ஆம் நூற்றாண்டின் முடிவுகளை எடுப்பதில் தென்கிழக்கு நாடுகளுக்குப் பிரதிநிதித்துவம் தேவை என்பதை வலியுறுத்தினார். உலகின் இரட்டை நிலைப்பாடுகளால் தென்கிழக்கு நாடுகளே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகள் கூட்டாகக் கண்டனம் தெரிவித்தன. அனைத்துப் பயங்கரவாத செயல்களும் கிரிமினல் நடவடிக்கை என்றும் நியாயமற்றது என்றும் பிரிக்ஸ் மாநாட்டு அறிக்கை குறிப்பிட்டது. மேலும் பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுவோம் என்றும் குறிப்பிட்டது.
பிரிக்ஸ் நாடுகள்
அதில் மேலும், "ஜம்மு காஷ்மீரில் 22ம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பயங்கரவாதத்திற்கு எதிராக எந்தவொரு சகிப்புத்தன்மையும் இருக்கவே கூடாது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இரட்டை நிலைப்பாடுகள் இருக்கவே கூடாது" என்று கூறப்பட்டு இருந்தது. மேலும், பயங்கரவாதத்தை எந்த மதத்துடனோ, நாட்டுடனோ தொடர்புப்படுத்தக் கூடாது என்பதும் அதில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications