அமைதியின் பக்கம் நிற்கிறோம்! ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பில்.. மோடி சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்
கீவ்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று உக்ரைன் சென்றிருக்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியுடன் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது, போர் நிறுத்தம் குறித்த மோடி பேசினாரா? கலந்துரையாடலின்போது என்ன பேசினார் என்பது குறித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.
இன்று உக்ரைன் சென்றடைந்த பிரதமர் மோடி, அதிபர் ஜெலன்ஸ்கியை அவரது மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அப்போது, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலம் மட்டுமே மோதலுக்கு தீர்வு காண முடியும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. உக்ரைனும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதன்மூலம் மோதலுக்கு தீர்வு காண வேண்டும்.

அமைதிக்கான முயற்சிகளில் முனைப்பான பங்களிப்புகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது. இந்த மோதலில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. தொடக்கம் முதலே நாங்கள் அமைதியின் பக்கம் நிற்கிறோம். இந்த மோதலில் முதல் உயிரிழப்பு ஒரு குழந்தை என்பது வேதனைப்படுத்துகிறது" என்று கூறியுள்ளார்.
அதேபோல, இந்த சந்திப்பு குறித்து தனது x பதிவில், "உக்ரைனுக்கு எனது வருகை வரலாற்று சிறப்புமிக்கது. இந்தியா - உக்ரைன் நட்புறவை ஆழப்படுத்தும் நோக்கத்தில் நான் இந்த மாபெரும் தேசத்திற்கு வந்தேன். அதிபர் ஜெலன்ஸ்கி உடன் ஆக்கபூர்வமான பேச்சுக்களை நடத்தினேன். அமைதி எப்போதும் நிலவ வேண்டும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது. உக்ரைன் அரசுக்கும், மக்களுக்கும் அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போர் நிறுத்தம் குறித்து, பிரதமர் தனது திட்டத்தை பகிர்ந்து கொண்டதாக சொல்லப்பட்டது. இதை குறித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது, "பிரதமர் பயணம் வரலாற்று சிறப்பு மிக்கது. பிரதமர் மோடிக்கும், அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முக்கிய பகுதி இரு தரப்பு உறவுகளுக்காக அமைந்தது. கல்வி, விவசாயம், பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்கள், வர்த்தகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவை மீண்டும் கட்டமைக்க, குழு அமைக்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.
உக்ரைன் போர் குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். அமைதிக்கு பங்களிக்கும் புதுமையான தீர்வுகளை உருவாக்க அனைத்து நட்பு நாட்டு தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். விரைவாக அமைதி ஏற்பட தேவையான பங்களிப்பை இந்தியா வழங்க தயாராக உள்ளது என்ற நிலைப்பாட்டை மோடி மீண்டும் உறுதி செய்தார்.மோதலின் விளைவுகள் குறித்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்.
மோடி தன்னுடைய எண்ணங்களையும், எதிர்பார்ப்பையும் பகிர்ந்து கொண்டார். இந்த விவகாரங்களில் ஜெலென்ஸ்கியின் சொந்த கருத்து என்ன என்று கேட்டோம். எனவே இது மிகவும் முன்னும் பின்னுமான விஷயம். அனைத்தையும் வெளிப்படுத்திவிட முடியாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications