மியான்மரில் மோடி... ரோஹிங்யா முஸ்லிம்கள் பிரச்சனை குறித்து சூச்சியுடன் இன்று பேச்சு
மியான்மர் சென்றுள்ள பிரதமர் மோடி ரோஹிங்யா முஸ்லிம்கள் பிரச்சனை குறித்து இன்று சூச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
நேபிடா: மியான்மர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டின் ஆலோசகர் ஆங் சாங் சூச்சியுடன் ரோஹிங்யா முஸ்லிம்கள் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது ராணுவமும் பவுத்த பேரினவாதிகளும் இனப்படுகொலை நிகழ்த்தி வருகின்றனர். ரோஹிங்யா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள் என்பதால் அவர்களை நரவேட்டையாடுகிறது ராணுவம்.

இனப்படுகொலை
அண்மையில் ரோஹிங்யா முஸ்லிம்கள் பாதுகாப்புக்கான அமைப்பு ஒன்று ராணுவம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி இனப்படுகொலை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. உலகை உலுக்கும் இனப்படுகொலையை மியான்மர் ராணுவம் நடத்தி வருகிறது.

ஒரு லட்சம் அகதிகள்
இதையடுத்து ஒரு லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து தப்பி வங்கதேசத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் இந்தியாவுக்குள்ளும் தஞ்சமடைந்துள்ளனர். சுமார் 30,000க்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் வங்கதேசத்தை ஒட்டிய மலைப்பகுதிகளில் உணவும் மருந்தும் இன்றி பட்டினியாலும் நோயாலும் பரிதவிக்கின்றனர்.

மியான்மரில் மோடி
இந்நிலையில் மியான்மர் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு ராணுவம் சிறப்பான வரவேற்பளித்தது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு அந்நாட்டு அதிபர் ஹதின் கியாவ் அளித்த விருந்தில் பங்கேற்றார். மியான்மர் அரசின் ஆலோசகர் ஆங் சாங் சூச்சியும் இந்த விருந்தில் கலந்து கொண்டார்.
|
சூச்சியுடன் பேச்சுவார்த்தை
இது தொடர்பாக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மியான்மரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். இன்று அதிபர் ஹதின் கியாவ், சூச்சி ஆகியோருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருதரப்பு உறவு மற்றும் ரோஹிங்யா முஸ்லிம்கள் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications